இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இன்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஒரு ருசிகர சம்பவம் நடைபெற்றது.
ஆட்ட விதிகளின்படி பந்து வீச்சாளரின் கையில் இருந்து பந்து வெளியேறுவதற்குள் ஆட்டக்காரர் கோட்டை விட்டு வெளியேறக் கூடாது. அவ்வாறு வெளியேறும்போது பந்து வீச்சாளர் விக்கெட்டில் அடித்தால் ஆட்டக்காரர் ஆட்டமிழப்பார். இதனை முதன்முதலாக 1947 ஆம் ஆண்டு இந்தியாவைச் சார்ந்த வினு மன்காட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பயன்படுத்தி பில் பிரௌன் என்பவரை ஆட்டமிழக்கச் செய்தார்.
இலங்கை விளையாடிக்கொண்டிருக்கும் போது 40 வது ஓவரை அஸ்வின் வீசினார். அந்த ஓவரின் 3 வது பந்தை வீசும்போது இலங்கை ஆட்டக்காரர் திரிமன்னே ஓடுவதற்கு தயாராக கோட்டுக்கு வெளியே சென்று விட்டார். இதனைக் கவனித்த அஸ்வின் பந்தை வீசாமல் விக்கெட்டில் அடித்து ரன் அவுட் கோரினார். திரிமன்னே ரன் அவுட் ஆனாரா என்பதை கள நடுவர்கள் மூன்றாவது நடுவருக்கு முறையிட்டார்கள்.
அப்போது சச்சின் டெண்டுல்கர், தலைவராக இருந்த ஷேவாக்கிடம் இந்த முறையீட்டை திரும்பப் பெற்று திரிமன்னேவை மீண்டும் ஆட அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதனை ஏற்று ஷேவாக்கும் முறையீட்டை திரும்பப் பெற்று திரிமன்னே ஆட அனுமதித்தார்.
இதற்கு பின்னரும் இவ்வாறு பந்து வீசப்படுவதற்கு முன் திரிமன்னே கோட்டை விட்டு வெளியேறிக் கொண்டே இருந்தார். இது இந்திய ரசிகர்களுக்கு வெறுப்பினைத் தந்நது. சிறப்பாக விளையாடிய திரிமன்னே 62 ஓட்டங்களை சேர்த்து இலங்கை வலுவான நிலையை அடைய உதவினார். இந்த ஆட்டத்தில் 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியது.
கனவான்களின் ஆட்டமென கருதப்படும் கிரிக்கெட்டின் சிறந்த தூதராக சச்சின் இன்று செயல்பட்டார் என சில ரசிகர்களும், முக்கியமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கு அஸ்வின் செய்தது சரிதான் என்றும் இவ்வாறு செய்வது விதிகளில் இருக்கும்போது அதற்கு மாறாக சச்சின் செயல்பட்டது தவறு என சில ரசிகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed