கொழும்பு (18 ஜூன் 2020): 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியா (பிசிசிஐ) சூதட்டம் மூலமே இலங்கையை வென்றது என்று இலங்கையின் முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
மும்பையில், 2011ல் நடந்த ஐ.சி.சி., உலக கோப்பை பைனலில் இந்திய அணி இலங்கை அணியை வென்று கோப்பையை கைபற்றியது.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கையின் முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே, 2011 உலக கோப்பை பைனலில் சூதாட்டம் நடந்ததாக குற்றம் சுமத்தி உள்ளார்.
மேலும் “இப்போட்டியில் நாங்கள் விலை போய்விட்டோம்.. பைனலில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் போட்டியில் சூதாட்டம் நடந்திருப்பதாக உணர்ந்தேன். அப்போது நான்தான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தேன். ஒரு நாடு எனும் முறையில் நான் இதை அறிவிக்க விரும்பவில்லை. இதுகுறித்து யாரிடம் வாதிட முடியும். இந்த சூதாட்டத்தில் வீரர்களுக்கு தொடர்பு கிடையாது. ஆனால் சில கட்சிகள் ஈடுபட்டன.” என்றுஅவர் கூறியுள்ளார்.
இப்போட்டியில் சூதாட்டம் நடந்ததாக முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே இந்த குற்றச்சாட்டை இலங்கையின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்தனே திட்டவட்டமாக மறுத்துள்ளார்.