ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெறுகிறது. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான இப்போட்டியின் ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - செக்.குடியரசின் ரடேக் ஸ்டீபானேக் இணை முதல் இடத்தைப் பெற்றது.
இந்த இணை இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் பாப் பிரையன்-மைக் பிரையன் இணையை தோற்கடித்தது. 7-6, 6-2 என்ற நேர்செட்களில் பயஸ்-ரடேக் இணை பிரையன் சகோதரர்கள் இணையைத் தோற்கடித்தனர். ஏற்கனவே அமெரிக்க ஓபன், விம்பிள்டன், பிரெஞ்ச் ஓபன் என 3 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றுள்ள பயஸ், இந்த வெற்றியின் மூலம் அனைத்து கிராண்ட் ஸ்லாம்களிலும் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் புரிந்தார்.
இதற்கு முன்பு மூன்று முறை ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்கு வந்து வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட பயஸ் இந்த முறை சாதனைப் படைத்தார். இந்த கிராண்ட் ஸ்லாம் பட்டத்துடன் இதுவரை 13 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற இந்தியராகவும் லியாண்டர் பயஸ் திகழ்கிறார்.
இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டத்திற்கும் பயஸ் தகுதி பெற்றார். இறுதிப் போட்டியில் அவர் ரஷ்யாவின் எலினா வெஸ்லினாவுடன் இணைந்து அமெரிக்காவின் மடேக் சான்ட்ஸ்-ருமேனியாவின் ஹரியா டீக்கா இணையினைச் சந்தித்து தோல்வியைத் தழுவினார். இறுதி வரை போராடி, டை பிரேக்கர் முறையில் வெற்றி வாய்ப்பைப் பயஸ் ஜோடி இழந்தது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் போட்டியில் பெலாரஸ் நாட்டைச் சார்ந்த விக்டோரியா அசரென்கா பட்டம் வென்றார். பெலாரஸ் நாட்டைச் சார்ந்த ஒருவர் கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெறுவது இதுவே முதல்முறையாகும். இறுதிப் போட்டியில் அசரென்கா ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை 6-3,6-0 என எளிதாக வென்றார். இந்த வெற்றியின் மூலம் மகளிர் தரவரிசையிலும் முதல் இடத்தை பிடித்துள்ளார் அசரென்கா.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|