சென்னை - சேலம் இடையா தொடங்கவுள்ள 8 வழிச்சாலைக்கு எதிராக நடிகர் மன்சூர் அலிகான் பேசினார். மேலும அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவரைக் கைது செய்த ஓமலூர் போலீஸார், வன்முறையை தூண்டுதல், அரசுக்கு எதிராக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் மறுக்கப் பட்டதால் உண்ணா விரதம் மேற்கொண்டார்.
ஆனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைய ஆரம்பித்ததால் உண்ணாவிரதத்தை கைவிட்டார். அத்துடன் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மன்சூர் அலிகானுக்கு சிறுநீரக தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்ததையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் மீண்டும், சிறைக்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில் மன்சூர் அலிகான் மீண்டும் ஜாமீன் கோரி விண்ணப்பித்தார். இதற்கு அரசுத்தரப்பில் ஆட்சேபனை வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து நிபந்தனை ஜாமீன் அளித்து சேலம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.