பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்குத் தடை!

Share this News:

விழுப்புரம் (05 ஜூலை 2020): விழுப்புரம் மாவட்டத்தில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தற்காலிகமாக தடை விதித்து மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகனுமான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி மதுரை உயர் நீதிமன்ற கிளை வழக்குப் பதிவு செய்து அதிரடி உத்தரவுகளை பிரப்பித்துள்ளது.

மேலும் வழக்கு சிபிசிஐடி போலீசாரால் கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐகள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரும் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே இந்த கொடூர சம்பவத்தில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. காவல்துறையில் காவலர்களுக்கு பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற அமைப்பு உள்ளது. இவர்கள் காவலர்கள் கீழ் பணி செய்வார்கள். இவர்கள் சாத்தான்குளம் கொலை வழக்கில் காவலர்களுக்கு உதவியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசை தடை செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வருகின்றன. இதனை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தற்காலிகமாக தடை விதித்து மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் விழுப்புரம் மாவட்டத்தை தொடர்ந்து, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.


Share this News: