சென்னை (21 மார்ச் 2022): மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவது குறித்து தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி ஆறு கர்நாடகா மட்டுமல்லாது தமிழகம், கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களுக்கும் பாய்கிறது. கோடிக்கணக்கான மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
இந்த நிலையில் காவிரியின் குறுக்கே ராம்நகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாது எனும் இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடகா முடிவு செய்துள்ளது. ஆனால் இதுவரை ஒன்றிய அரசு இதற்கான அனுமதியை வழங்கவில்லை.
இந்த நிலையில் மேகதாதுவில் புதிய அணை கட்டும் பணிக்கு கர்நாடக சட்டசபையில் நடப்பு நிதியாண்டில் ரூ 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழக அரசும் கண்டனத்தை பதிவு செய்தது.
இது இப்படியிருக்க கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வந்து பேசினார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். நாம் தண்ணீருக்கு கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக பேசினார். அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் இந்த தீர்மானத்தின் மீது பேசினர். இறுதியாக மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு தமிழக பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.