கோவையில் பாஜக இந்து முன்னணியினர் இடையே மோதல் – 3 பேருக்கு அரிவாள் வெட்டு!

Share this News:

கோவை (02 மார்ச் 2020): கோவையில் பாஜக, இந்து முன்னணியினர் இடையே ஏற்பட்ட மோதலில் மூவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை கவுண்டம்பாளையம் தீயணைப்பு அலுவலகம் அருகே இரு சக்கர வாகனமும் காரும் மோதிக்கொண்டன. அதையடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கும் காரில் வந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த இந்து முன்னணியைச் சேர்ந்த கார்த்திக், ஜெரால்ட், ஹரீஷ் ஆகியோர் கார் ஓட்டி வந்த டிரைவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். அந்தப் பெண் இதுகுறித்து தன்னுடைய சகோதரர் செல்வாவுக்குத் தகவல் அளித்தார். செல்வா பா.ஜ.கவில் உள்ள தன் நண்பர் அசோக்கிடம் தெரிவித்தார். அவர்கள் தங்கள் நண்பர்களுடன் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர். அங்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த அசோக் தரப்பினருக்கும் இந்து முன்னணியைச் சேர்ந்த கார்த்திக் தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தீவிரமாக மோதிக்கொண்டனர்.

அந்த மோதலில் பா.ஜ.க.வைச் சேர்ந்த அசோக் தரப்பினர் அரிவாளால் தாக்கியதில் இந்து முன்னணியை சேர்ந்த கார்த்திக், ஜெரால்ட், ஹரீஷ் ஆகிய மூவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் படுகாயம் அடைந்தனர். உடனே பா.ஜ.க. நிர்வாகி அசோக்கும் அவருடைய நண்பர்களும் அங்கிருந்து தப்பி ஒடினர். பின்னர் வந்து சேர்ந்த காவலர்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனையடுத்து இந்து முன்னணி நிர்வாகிகளை அரிவாளால் தாக்கியதாக பா.ஜ.க இளைஞர் அணி நிர்வாகி அசோக் அவருடைய கூட்டாளிகளான ராசு, சண்முக சுந்தரம், சச்சு உட்பட 6 பேர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் ஆகிய 5 பிரிவுகளில் துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share this News:

Leave a Reply