வேஷத்தை மாற்றினால் விட்டுவிடுவாங்களா? – வசமாக சிக்கிய பாபா!

Share this News:

புதுடெல்லி (16 ஜூன் 2021): டெல்லியில் சிக்கிய சிவசங்கர் பாபாவை சென்னைக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.

இதுதொடர்பான வழக்கில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ உட்பட 8 பிரிவுகளின்கீழ் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவுசெய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், சிவசங்கர் பாபா நெஞ்சுவலி காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகச் சான்றுகளையும் புகைப்படங்களையும் அவரது தரப்பினர் சமர்ப்பித்திருந்தனர். இதையடுத்து, டேராடூனில் உள்ள சிவசங்கர் பாபாவை நேரடியாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி குழு விரைந்தது. மேலும், சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனிடையே டேராடூனில் இருந்து சிவசங்கர் பாபா தப்பித்துச் சென்றார்.

ஆனால், இன்று காலை டெல்லியில் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீஸார் வளைத்துப் பிடித்தனர். அதனைத் தொடர்ந்து இன்று மாலை அல்லது நாளை சென்னைக்கு அழைத்து வர உள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், இன்று டெல்லி நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரை சென்னைக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னைக்கு அழைத்துவரப்படும் அவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக சிவசங்கர் பாபாவை கைது செய்தபோது, அவர் மொட்டை தலையுடனும் காவி உடையுடனும் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply