புலி வாலை பிடித்த கதையானது தமிழக காங்கிரஸின் நிலை!

Share this News:

சென்னை (16 ஜன 2020): தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி திமுகவுக்கு எதிராக வெளியிட்ட அறிக்கையால் தற்போது தமிழக காங்கிரஸுக்கு புலிவாலை பிடித்த கதையாகியுள்ளது.

திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், உள்ளாட்சித் தேர்தலில் நடத்தப்பட்ட விதத்திற்காக கொதித்தெழுந்து அறிக்கை வெளியிட்டது. 27 மாவட்டங்களில் நட்ந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் வந்த பின்னர் கே.எஸ்.அழகிரி, “உள்ளாட்சித் தேர்தலுக்கு திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் இதுவரை 2 இடங்கள் மட்டும் திமுக தலைமையால் வழங்கப்பட்டுள்ளது.

27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில் ஒரு மாவட்டட ஊராட்சித் தலைவர் பதவியோ, துணைத் தலைவர் பதவியோ இதுவரை வழங்கப்படவில்லை. இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று அறிக்கையின் மூலம் புலம்பித் தள்ளினார்.

இதனால் ஆவேசம் அடைந்த திமுக, சிஏஏவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்தைப் புறக்கணித்தது. சோனியா காந்தியும் தமிழக காங்கிரஸுக்கு டோஸ் விட்டார்..

இந்த சமயத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், “காங்கிரஸ், திமுகவைவிட்டு விலகுவதால் என்ன பிரச்னை. எங்களுக்கு ஒரு நட்டமும் இல்லை. யாரையும் நாங்கள் வெளியே போ என்று சொல்ல மாட்டோம். ஆனால், தானாக போகிறவர்களைப் பிடித்து வைக்கவும் மாட்டோம்,” என்று அதட்டலாக பேசினார். இது மேலும் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல் ஆனது.

இதைத் தொடர்ந்து கே.எஸ்.அழகிரி, “திமுகவும் காங்கிரஸும் கூட்டணி அமைத்தது கொள்கை அடிப்படையில். தளபதி ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட மன வருத்தத்தைத்தான் வெளிப்படுத்தினோம். அதில் தவறேதும் இல்லை,” என்று கூறியிருக்கிறார். இதற்கு திமுகவின் ரியாக்‌ஷன் என்னவோ என மக்கள் எதிர்பார்த்தபடி உள்ளனர்.


Share this News:

Leave a Reply