கள்ளக் காதலுக்கு தடையாக இருந்த நான்கு வயது குழந்தை படுகொலை – நெல்லையில் பயங்கரம்!

Share this News:

நெல்லை (24 பிப் 2020): நெல்லையில் கள்ளக்காதலியின் 4 வயது பாலகனை பலமாக தாக்கி கொலை செய்துவிட்டு, தப்பியோடிய கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சிவராத்திரியில் நடைபெற்ற பகீர் சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி…

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே டானா பகுதியை சேர்ந்தவர்கள் அந்தோனி பிரகாஷ் – தீபா தம்பதி. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 4 வயதில் லோகேஷ் என்ற மகன் இருந்தான். எல்.பி.ஜி டேங்கர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வரும் அந்தோனி பிரகாஷ், மாதத்தில் 15 நாட்கள் வெளியூர்களிலே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்தும் சுய உதவி குழுவில் இணைந்து கடன் பெற்றுள்ளார் தீபா.

இந்த கடன் தொகையை வசூலிக்க சொரிமுத்து என்பவர் தீபா வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். கணவன் பெரும்பாலான நேரங்கள் வீட்டில் இல்லாததை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இருவரும் நட்பாக பழகி புதிய உறவை தொடங்கியுள்ளனர்.

அக்கம் பக்கம் வீட்டார்கள் கொடுத்த தகவலின் மூலமும், தனது 4 வயது மகனுடன் வீடியோகாலில் பேசுவது மூலமும் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் அந்தோனி பிரகாசுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் தீபாவை பலமுறை கண்டித்தும், அவர்களுக்குள் பழக்கம் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு சொரிமுத்துவுடன், தீபா தனது மகன் லோகேஷுடன் நெல்லையப்பர் கோவிலுக்கு சென்றுள்ளார்.

அங்கு தீபா மட்டும் கோவிலுக்குள் சென்ற சமயத்தில், அந்தோனிபிரகாஷ் செல்போனில் அழைத்துள்ளார். அப்போது செல்போனை வைத்திருந்த சிறுவன் லோகேஷ் அதனை அட்டண்ட் செய்து தந்தையிடம் பேசியுள்ளான். தந்தை எங்கு இருக்கிறாய் என கேட்க, ஒரு மாமாவுடன் நானும், அம்மாவும் கோவிலுக்கு வந்துள்ளதாக தெரிவித்ததோடு, சொரிமுத்து நிற்கும் திசையை நோக்கி செல்போனை திருப்பியும் காட்டியுள்ளான். இதனைக்கண்டு ஆத்திரமடைந்த சொரிமுத்து, செல்போனை புடுங்கி சுவிட்ச் ஆப் செய்ததோடு, சிறுவனை கடுமையாக தாக்கியதில் அவன் மயங்கியுள்ளான்.

இதனை கோவிலில் இருந்து வெளியே வந்த தீபா பார்த்து அதிர்ந்துள்ளார். அதனை தொடர்ந்து லோகேஷ் பாளை அரசு மருத்துவமனையிலுள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டும் எவ்வித பலனின்றி ஞாயிறு காலை உயிரிழந்தான்.

தகவலறிந்து அந்தோனிபிரகாஷ் மற்றும் அவனது உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து, சொரிமுத்துவை தாக்க முயன்றுள்ளனர். அவர்களை சமாளித்து அங்கிருந்து சொரிமுத்து தப்பியோடியுள்ளான்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரம் முதல் மகனை கள்ளக்காதலன் தாக்கியது வரை அனைத்து விவரங்களையும் தீபா ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து தீபாவை கைது செய்த போலீசார், தப்பியோடிய சொரிமுத்துவை தேடி வருகின்றனர்.

அரசனை நம்பி புருசனை இழந்த கதை போய், தற்போது கள்ளக்காதலால் பெற்ற மகனை இழந்து தாய் சிறையில் இருக்க, தந்தை வீதியில் நிற்க, கள்ளக்காதலன் மட்டும் தலைமறைவாக சுற்றி வரும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Share this News:

Leave a Reply