சென்னை (07 மார்ச் 2022): முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் அப்போலோ டாக்டர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அடுத்த கட்ட விசாரணையை மீண்டும் துவக்கியுள்ளது. முதல்நாள் விசாரணையில் அப்போலோ டாக்டர் பாபு மனோகர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன்படி 2016ல் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் நாளுக்கு முன் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. டாக்டர் சிவக்குமார் அழைத்ததன் பேரில் பதவியேற்கும் முந்தைய நாள் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் சந்தித்தேன்.
அவருக்கு தலைசுற்றல், மயக்கம் இருந்தது. அவரால் மற்றொருவர் துணையில்லாமல் நடக்க முடியாத சூழல் நிலவியது. சிறுதாவூர் அல்லது ஊட்டி சென்று சில நாட்கள் ஓய்வெடுக்க பரிந்துரைத்தேன். தினமும் 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறிய ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்தார். அவருக்கு சில மருந்துகளை பரிந்துரைத்து, உடற்பயிற்சி மேற்கொள்ளச் சொன்னேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்தார்.