சென்னை (17 செப் 2020): விழுப்புரத்தில் புதிதாக தொடங்க இருக்கும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டுவது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
வேலூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிப்பதாக நேற்றைய தினம் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
இரண்டாகப் பிரிக்கப்படும் பல்கலைக் கழகத்தின் ஒரு பிரிவிற்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டுவது குறித்த ஆலோசனையில் உள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
இதனிடையே விழுப்புரத்தில் அமைய உள்ள புதிய பல்கலைக்கழகத்திற்கு வன்னிய சமுதாய தலைவரும், அண்ணாவின் நண்பருமான ஏ.கோவிந்தசாமி பெயரை சூட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏற்கனவே ஜெயலலிதா பெயரில் நாகையில் மீன்வளப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.