ரஜினி, உவைஸியுடன் கூட்டணி – கமல் ஹாசன் பதில்!

Share this News:

நெல்லை (16 டிச 2020): உவைஸி, ரஜினியிடன் கூட்டணி வைப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

நெல்லையில் இதுகுறித்து பேசிய கமல்ஹாசன் , யாருடனும் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை ஓவைசியோடு எந்த பேச்சுவார்த்தையும் நடைபெற வில்லை, ரஜினியோடு கூட்டணி அமையும் பட்சத்தில் இருவரில் யார் முதல்வர் என்பதை பேசி முடிவெடுப்போம்.

ஆன்மீகத்தை நோக்கி நான் செல்லவில்லை. என்னை நோக்கியும் அது வரத்தேவையில்லை. மக்களிடத்தில் ஆன்மீகம் இருக்கிறது என்றால் அதுவும் என் வாழ்வில் ஒரு அங்கமாகத்தான் இருக்கும். எனக்கு தேவையா இல்லையா என்பது என்னுடைய பிரச்சினை.

ஒரு நபரின் அன்புக்கும், கட்சியில் சேருவதற்கும் நாங்கள் நெற்றியை பார்த்து முடிவு செய்வதில்லை. கண்களை பார்த்துதான் முடிவு செய்கிறோம். அதில் நேர்மை தெரிந்தால் அதுதான் முதல் தகுதி

அரசியலில் குதிப்பது, இறக்கிவிடப்படுவது என்பதெல்லாம் எனக்கு பொருந்தாது. யாராவது பிடித்து கொண்டு வந்து இறக்கி விடும் அளவிற்கு தள்ளாமை இல்லை. நான் பி டீம் என்றால் அது காந்திக்குதான். மற்றபடி நாங்கள்தான் ஏ டீம். கொள்கை இல்லாமல் வேறு வழியில்லாமல் அரசியலுக்கு வரவில்லை. இதில் எனக்கு அசவுகரியம்தான் அதிகம்.

இருந்தாலும் இந்த முடிவுகளை எடுப்பதற்கு 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு சினிமா எடுத்தால் கூட எனக்கு பிடித்ததும் மக்களுக்கு பிடித்ததைத் தான் எடுப்பேன். என்னை யாரும் சொல்லி படம் எடுக்க வைக்க முடியாது. அப்படியென்றால் என் படத்தின் கதையெல்லாம் வேற மாதிரி இருந்திருக்கும். எனக்கு நியாயம் என்று தோன்றுவதை மக்களுக்கு நல்லது என்று தோன்றுவதைதான் செய்வேன். என்னை இயக்கவோ தள்ளவோ முடியாது.

எம்.ஜி.ஆரை தேர்தலுக்காக உரிமை கொண்டாடவில்லை எம்.ஜி.ஆரை பற்றி இப்போது பேசவில்லை. 40 ஆண்டுகளுக்கு முன்பே பேசி இருக்கிறேன். இப்போது நீங்கள் என்னை உன்னிப்பாக கவனிப்பதால் தெரிகிறது. எம்.ஜி.ஆர் என்னை கொஞ்சியுள்ளார். நெற்றியில் முத்தமிட்டுள்ளார். தொலைபேசியில் நீண்ட உரையாடல் நடத்தியிருக்கிறார். இதையெல்லாம் நான் மார்த்தட்டி சொல்லிக்கொள்ளவில்லை அவ்வளவுதான்.

போஸ்டரில் எம்.ஜி.ஆர் படத்தை சிறியதாக போட்டவர்கள்தான் இந்த அதிமுக கோஷ்டி. யார் அவரை அரசியலுக்காக கையில் எடுக்கிறார்கள். யார் அன்பிற்காக கையில் எடுக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. உங்களுக்காவது அது தெரிய வேண்டும்.

கண்டிப்பாக மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இருக்கிறது. நல்லவர்கள் எங்கள் பக்கம் சேருவார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம்.

எனக்கு பல தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என அழைப்பு வருகிறது. அது எந்த தொகுதி என கலந்தாலோசித்துக் கொண்டிருக்கிறோம். அதனால் கொஞ்சம் நிதானித்து வெளிப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

நான் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட எண்ணிக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால் அந்த தொகுதி மக்களிடம் சுற்றி குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய ஏதுவாக இருக்கும் என நினைக்கிறேன்.

தேர்தல் வாக்குறுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இலவசமாக வழங்குவது உள்ளிட்டவைகள் இடம்பெறும்.

இதுவரை இல்லாத அரசியலை நடத்த வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் ஆசை. நல்ல விஷயங்கள் எந்த சித்தாந்தத்தில் இருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் தன்மை மய்யத்தாருக்கு உண்டு. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற திட்டத்தை நிறைவேற்றுவோம்.

டார்ச் லைட் சின்னம் மறுக்கப்பட்டுள்ளது. நான்கு அல்லது 5 நாட்களில் நீதிமன்றத்தை நாடுவோம். அதை போராடி பெறுவோம். தேர்தல் ஆணையத்திடம் எடுத்துரைப்போம் என கூறினார்.


Share this News:

Leave a Reply