தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி – காதர்மொய்தீன் அறிக்கை!

Share this News:

சென்னை (15 ஜூலை 2020): ஆன்மீக சுற்றுலா வந்து சிறையிலடைக்கப்பட்டவர்கள் தற்போது ஹஜ் இல்லத்தில் தங்க வைக்க உத்தரவிட்டமைக்காக தமிழக முதல்வருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் நன்றியினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து (15.07.2020 புதன்கிழமை) அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:

தமிழகத்திற்கு ஆன்மீகச் சுற்றுலா வந்திருந்த இந்தோனேஷியா, மலேசியா, பங்களாதேஷ், பிரான்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 129 முஸ்லிம் சுற்றுலா பயணிகளை தமிழக அரசு கைது செய்தது. அவர்களில் 20க்கும் மேற்பட்ட மகளிரும் உள்ளனர்.

அவர்கள்மீது மாநில அரசு 15 வழக்குகளை பதிவு செய்திருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்ட இவர்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பிறகு இவர்களுக்குப் பிணை மனுத் தாக்கல் செய்யப்பட்ட தருணத்தில் இவர்கள் சைதாபேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் பிணை வழங்கப்பட்ட நிலையில் சென்னை புழல் சிறை வளாகத்தில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்கள். தமிழக அரசு இந்த சிறார் சிறையை விசா விதிமுறை மீறல் செய்தவர்களை அடைப்பதற்கான சிறப்பு முகாம் என்று அறிவித்தது.

புழல் சிறையில் அவர்கள் அனுபவிக்கும் பல்வேறு சிரமங்களைச் சுட்டிக்காட்டி, அவர்களை புழல் சிறையில் இருந்து முஸ்லிம் நிறுவனங்கள் அரவணைப்பில் தங்கிக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றத்தில் சமுதாயத்தவரால் பொதுநல வழக்கு தொடரப்பட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது.

பின்னர் சென்னை சூளையில் உள்ள ஹஜ் சொசைட்டி நிலையத்தில் தங்குவதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. இடம் வழங்கிய ஹஜ் சொசைட்டி நிறுவனத்துக்கு நன்றி தெரிவிப்பதோடு ஆன்மீக சுற்றுலா பயணிகளுக்கு பரிவுகாட்டி உதவியுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் மற்றும் தமிழக அரசுக்கும் தமிழக முஸ்லிம் சமுதாயம் நன்றி பாராட்டி வாழ்த்து சொல்லுகிறது.

இது சம்பந்தமாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டு இருக்கிற அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் முஸ்லிம் சமுதாயம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்துள்ள ஆன்மீக சுற்றுலா பயணிகள் மீது உள்ள வழக்குகள் யாவும் ஜுலை 24ம் தேதியில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. அதேபோல் தமிழகத்திற்கு வந்துள்ள ஆன்மீக சுற்றுலா பயணிகளின் மீது வழக்குகளை வரும் 20 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் விசாரித்து தீர்ப்பு அளிக்க இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஆன்மீக சுற்றுலா பயணிகளை அவரவர் நாட்டிற்கு விரைவாக அனுப்பி வைக்கின்ற முயற்சிகளை மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தகைய நன் முயற்சிகளுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், தமிழக அரசும் எல்லா விதமான உதவிகளையும் துரிதமாக செய்து தந்து உதவுமாறு அன்புடன் வேண்டி கொள்கிறோம்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News: