நான் உயிரோடு இருக்கும் வரை சங்கருக்கு நீதி வாங்காமல் விடமாட்டேன்: கவுசல்யா!

Share this News:

சென்னை (22 ஜூன் 2020): உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.

உடுமலை சங்கர், கெளசல்யா இருவரும் வெவ்வேறு ஜாதியினராக இருந்த போதும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கு கெளசல்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் 2016-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் உடுமலை சங்கர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதில் படுகாயங்களுடன் கெளசல்யா உயிர் தப்பினார். இந்த ஜாதி ஆணவக் கொலை தமிழகத்தையே பதைபதைக்க வைத்தது.

இந்த ஆணவப்படுகொலை தொடர்பாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாயார் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பழனி மணிகண்டன், எம்.மைக்கேல் (எ) மதன், பி.செல்வக்குமார், பி.ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் (எ) கலைதமிழ்வாணன், கல்லூரி மாணவர் பிரசன்ன குமார் மற்றும் பட்டிவீரன்பட்டி மணிகண்டன் என 11 பேர் மீது உடுமலை காவல்துறை கூலிப்படை வைத்து கொலை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்து கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பு அளித்தார். அதில் முதல் குற்றவாளியான கெளசல்யாவின் தந்தை சின்னசாமி, குற்றவாளிகள் ஜெகதீசன், பழனி எம்.மணிகண்டன் , பி.செல்வக்குமார் , தமிழ் (எ) கலைதமிழ்வாணன் , மதன் (எ) எம். மைக்கேல் ஆகிய 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தார். கூட்டு சதி, வன்கொடுமை ஆகிய இரு பிரிவுகளின் கீழ் 6 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தன்ராஜ் (எ) ஸ்டீபன் தன்ராஜூக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்தும், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பட்டிவீரன்பட்டி மா.மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். இதில் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி , தாய்மாமன் பாண்டித்துரை , கல்லூரி மாணவர் பிரசன்னகுமார் ஆகிய 3 பேரை விடுதலை செய்து திருப்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கு மீதான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.

அதில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. மற்ற 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகவும் குறைத்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் கவுசல்யாவின் தாய் அன்னலஷ்மி, மாமா பாண்டிதுரை, வாகனம் ஏற்பாடு செய்த பிரசன்ன குமார் ஆகியோர் மூவரின் விடுதலையையும் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

இதற்கிடையே நான் உயிரோட இருக்கிற வரைக்கும் நீதி வாங்காமல் விடமாட்டேன் என்று கவுசல்யா தெரிவித்துள்ளார்.


Share this News: