தமிழனாக பிறந்தது குற்றமா? – முத்தையா முரளிதரன் பரபரப்பு அறிக்கை

Share this News:

சென்னை (16 அக் 2020): முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படமான ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில் முத்தையா முரளிதரன் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

அதில் கூறியிருப்பதாவது:

‘இதுநாள்‌ வரை என்‌ வாழ்க்கையில்‌ பல சர்ச்சைகளைக் கடந்தே வந்துள்ளேன்‌. அது விளையாட்டானாலும்‌ சரி தனிப்பட்ட வாழ்க்கையானாலும்‌ சரி. தற்போது எனது வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ திரைப்படத்தைச்‌ சுற்றி பல்வேறு சர்ச்சைகள்‌, விவாதங்கள்‌ எழுந்துள்ள நிலையில்‌ அதற்கான சில விளக்கங்களைக் கூற விரும்புகிறேன்‌.

என்னைப் பற்றி திரைப்படம்‌ எடுக்க நினைப்பதாகக் கூறி தயாரிப்பு நிறுவனம்‌ என்னை அணுகியபோது முதலில்‌ தயங்கினேன்‌. பிறகு முத்தையா முரளிதரனாக நான்‌ படைத்த சாதனைகள்‌ என்னுடைய தனிப்பட்ட சாதனைகள்‌ மட்டும்‌ இல்லையென்பதாலும்‌, இதற்குப் பின்னால்‌ எனது பெற்றோர்கள்‌ என்னை வழிநடத்திய ஆசிரியர்கள், எனது பயிற்சியாளர்கள்‌, சக வீரர்கள்‌ எனப் பலராலும்‌ உருவாக்கப்பட்டவன்‌ என்பதாலும்‌ அதற்குக் காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம்‌ கிடைக்கும்‌ என நினைத்துதான்‌ இந்தத் திரைப்படத்தை உருவாக்கச் சம்மதித்தேன்‌.

இலங்கையில்‌ தேயிலைத்‌ தோட்டக் கூலியாளர்களாக எங்கள்‌ குடும்பம்‌ தங்களது வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில்‌ முதலாவதாகப் பாதிக்கப்பட்டது இந்திய வம்சாவளியான மலையகத் தமிழர்கள்தான்‌. இலங்கை மண்ணில்‌ எழுபதுகள்‌ முதல்‌ தமிழர்கள்‌ மீது நடத்தப்பட்ட கலவரங்கள்‌ முதற்கொண்டு , ஜேவிபி போராட்டத்தில்‌ நடந்த வன்முறை , பின்னர்‌ நடந்த தொடர்‌ குண்டுவெடிப்புகள்‌ என எனக்கு நினைவு தெரிந்த நாள்‌ முதலே தொடர்ந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம்‌.

என்‌ ஏழு வயதில்‌ எனது தந்தை வெட்டப்பட்டார்‌. என்‌ சொந்தங்களில்‌ பலர்‌ பலியாகினர். வாழ்வாதாரத்தை இழந்து பல முறை நடுத்தெருவில்‌ நின்றிருக்கிறோம்‌. ஆதலால்‌, போரால்‌ நிகழும்‌ இழப்பு அதனால்‌ ஏற்படும்‌ வலி என்ன என்பது எனக்கும்‌ தெரியும்‌. முப்பது வருடங்களுக்கு மேல்‌ போர்‌ சூழ்நிலையில்‌ இருந்த நாடு இலங்கை. அதன்‌ மத்தியிலேயேதான்‌ எங்கள்‌ வாழ்க்கைப் பயணம்‌ நடைபெற்றது. இந்தச் சூழ்நிலையில்‌ இருந்து எப்படி நான்‌ கிரிக்கெட்‌ அணியில்‌ இடம்பெற்று சாதித்தேன்‌ என்பது பற்றியான படம்‌தான்‌ ‘800’.

இது இப்போது பல்வேறு காரணங்களுக்காக அரசியலாக்கி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம்‌ நான்‌ பேசிய சில கருத்துகள்‌ தவறாகத் திரித்துச் சொல்லப்பட்டதால்‌ வந்த விளைவுதான்‌. உதாரணமாக நான்‌ 2009-ம்‌ ஆண்டு தான்‌ என்‌ வாழ்க்கையில்‌ மிக மகிழ்ச்சியான நாள்‌ என்று 2019-ல்‌ கூறியதை தமிழர்களைக் கொன்று குவித்த நாள்தான்‌ முத்தையா முரளிதரனின்‌ வாழ்க்கையில்‌ மகிழ்ச்சியான நாள்‌ எனத் திரித்து எழுதுகிறார்கள்‌.

ஒரு சராசரி குடிமகனாக சிந்தித்துப்‌ பாருங்கள்‌. போர்‌ சூழ்நிலையிலேயே இருந்த ஒரு நாட்டில்‌ எங்கு எது நடக்கும்‌ என்பது தெரியாது. என்‌ பள்ளிக் காலத்தில்‌ என்னுடன்‌ பள்ளியில்‌ ஒன்றாக விளையாடிய மாணவன்‌ மறுநாள்‌ உயிருடன்‌ இருக்க மாட்டான்‌. வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள்‌ வீடு திரும்பினால்தான்‌ நிஜம்‌. இப்படிப்பட்ட சூழ்நிலையில்‌ போர்‌ முடிந்தது ஒரு சராசரி மனிதனாகப் பாதுகாப்பாக உணர்வது மட்டுமல்லாமல்‌ போர்‌ முடிந்ததால்‌ கடந்த பத்து வருடங்களாக இரண்டு பக்கமும்‌ உயிரிழப்புகள்‌ ஏதும்‌ இல்லாமல்‌ இருப்பதை மனதில்‌ வைத்தே 2009-ம்‌ ஆண்டு எனது வாழ்க்கையில்‌ மகிழ்ச்சியான நாள்‌ என்கிற கருத்தினைத்‌ தெரிவித்தேன்‌. ஒருபோதும்‌ நான்‌ அப்பாவி மக்களின்‌ படுகொலைகளை ஆதரிக்கவும்‌ இல்லை ஆதரிக்கவும்‌ மாட்டேன்‌.

அடுத்து எனது பள்ளிக் காலம்‌ முதலே நான்‌ தமிழ் வழியில்‌ படித்து வளர்ந்தவன்தான்‌. எனக்குத் தமிழ்‌ தெரியாது என்று கூறுவது மற்றுமொரு தவறான செய்தி. தமிழ்‌ மாணவர்கள்‌ தாழ்வு மனப்பான்மை உடையவர்‌கள் என நான் கூறியதாகச் சொல்கின்றனர்‌. இயல்பாகவே சிங்களர்கள்‌ மத்தியில்‌ சிறுபான்மை சமூகமாக வாழ்வதால்‌ எல்லோரிடமும்‌ ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கத்தான்‌ செய்யும்‌. அது இயற்கை. அது என்னிடத்திலும்‌ இருந்தது. காரணம்‌ எனது பெற்றோரும்‌கூட அப்படிப்பட்ட சிந்தனையில்தான்‌ இருந்தார்கள்‌. அதையும்‌ மீறி கிரிக்கெட்‌ மீதான எனது ஆர்வம்‌ பள்ளியின்‌ கிரிக்கெட்‌ அணியில்‌ என்னைப் பங்கேற்கத் தூண்டியது. எனது முயற்சியால்‌ அணியில்‌ சேர்ந்தேன்‌. எனது திறமையால்‌ நான்‌ ஒரு தவிர்க்க இயலாதவனாக மாறினேன்‌ . எனவேதான்‌ தாழ்வு மனப்பான்மையைத் தூக்கி எறிந்து உங்கள்‌ திறமை மீது நம்பிக்கை வைத்து முயற்சி செய்யுங்கள்‌ என்ற எண்ணத்தில்தான்‌ கூறினேன்‌.

என்னைப் பொறுத்தவரையில்‌ சிங்களர்களாக இருந்தாலும்‌ மலையகத் தமிழர்களாக இருந்தாலும்‌ ஈழத் தமிழர்களாக இருந்தாலும்‌ அனைவரையும்‌ ஒன்றாகவே பார்க்கிறேன்‌. ஒரு மலையகத் தமிழனான நான்‌ என்‌ மலையக மக்களுக்குச் செய்த உதவிகளைக் காட்டிலும்‌ ஈழ மக்களுக்குச் செய்த உதவிகளே அதிகம்‌. செய்யும்‌ நன்மைகளைச் சொல்லிக் காட்டுவதை என்றைக்கும்‌ நான்‌ விரும்புவதில்லை. ஆனால்‌, இன்று அதை சொல்லியாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்‌.

ஐ.நா.வின் உணவுத் தூதராக இருந்தபோது 2002-ம்‌ ஆண்டு விடுதலைப் புலிகளின்‌ கட்டுப்பாட்டில்‌ இருந்த பகுதிகளில்‌ உள்ள பள்ளிக்‌ குழந்தைகளுக்கும்‌ அந்தத் திட்டத்தை எடுத்துச் சென்றது முதல்‌‌ சுனாமி காலங்களில்‌ பாதிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு நான்‌ செய்த உதவிகள் வரை அந்த மக்கள்‌ அறிவர்‌.

போர்‌ முடிந்தபின்‌ கடந்த பத்து வருடங்களாக எனது தொண்டு நிறுவனமான FOUNDATION OF GOODNESS மூலம்‌ ஈழ மக்களுக்குச் செய்யும்‌ உதவிகள்‌தான்‌ அதிகம்‌. ஈழத்‌ தமிழர்கள்‌ வாழும்‌ பகுதிகளில்‌ எனது தொண்டு நிறுவனக் கிளைகள்‌ மூலம்‌ குழந்தைகள்‌ கல்வி, பெண்கள்‌ முன்னேற்றம்‌, மருத்துவம்‌ எனப் பல வகைகளில்‌ பல உதவிகள்‌ செய்து வருகிறேன்‌.

மக்கள்‌ நல்லிணக்கத்துக்காக வருடா வருடம்‌ MURALI HARMONY CUP என்கிற பெயரில்‌ கிரிக்கெட்‌ போட்டிகள்‌ வடக்கு மற்றும்‌ கிழக்குப் பகுதிகளில்‌ நடத்தி வருகிறோம்‌. இன்னும்‌ இதுபோல்‌ ஏராளமான விடயங்கள்‌ உள்ளன. நான்‌ இலங்கை அணியில்‌ இடம்பெற்று சாதனை படைத்த காரணத்தினாலேயே என்‌ மீது ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது. நான்‌ இந்தியாவில்‌ பிறந்து இருந்தால்‌ நான்‌ இந்திய அணியில்‌ இடம்பெற முயன்றிருப்பேன்‌. இலங்கைத் தமிழனாக பிறந்தது என் தவறா?

இவை அனைத்தையும்‌ விடுத்து சிலர்‌ அறியாமையாலும்‌ சிலர்‌ அரசியல்‌ காரணத்திற்காகவும்‌ என்னைத் தமிழ்‌ இனத்திற்கு எதிரானவர்‌ என்பது போல்‌ சித்தரிப்பது வேதனையளிக்கிறது. எவ்வளவு விளக்கம் அளித்தாலும்‌ எதிர்ப்பாளர்கள்‌ யாரையும்‌ சமாதானப்படுத்த முடியாது என்றாலும்‌ என்னைப்‌ பற்றி ஒரு பக்கம்‌ தவறான செய்திகள்‌ மட்டுமே பகிரப்பட்டு வரும்‌ நிலையில்‌ நடுநிலையாளர்களுக்கும்‌ பொது மக்களுக்கும்‌ இவ்விளக்கத்தை அளிக்கிறேன்‌’.

இவ்வாறு முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply