நாகூர் தர்காவை கையகப்படுத்தியது தமிழக அரசு!

Share this News:

நாகப்பட்டினம் (27 பிப் 2022): நாகூர் தர்காவை தமிழக அரசு கையகப்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம், நாகூர் ஆண்டவர் தர்ஹா இதுவரை பரம்பரை அறங்காவலர்கள் 8 பேரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பரம்பரை அறங்காவலர்களில் ஒருவர் இறந்தார்.

இதனை அடுத்து தர்காவை நிர்வாகம் செய்வதில் அறங்காவலர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. இந்த முரண்பாடு காரணமாக நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2017 முதல் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன், ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் ஆகியோர் இடைக்கால நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.

4 மாதங்கள் மட்டும் இடைக்கால நிர்வாகிகளாக நியமிக்கப்பட்ட இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நாகூர் ஆண்டவர் தர்ஹா நிர்வாகத்தை கவனித்து வந்தனர்.

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் 4 மாதங்களுக்கு நியமிக்கப்பட்ட தற்காலிக நிர்வாக குழு 4 ஆண்டுகளுக்கு மேல் தொடர்வதால் இந்த குழுவை ஏன் கலைக்க கூடாது என கேள்வி எழுப்பினர்.

மேலும் இதுகுறித்து தற்காலிக நிர்வாக குழு மார்ச் 10ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், அதுவரை இந்த குழு தர்ஹா நிர்வாகத்தை கவனிக்க கூடாது என்று உத்தரவிட்டனர். மேலும் தர்ஹா நிர்வாகத்தை வக்ஃபு வாரியம் கையில் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்களை வழங்கினர்.

இதையடுத்து நாகூர் தர்ஹா மற்றும் நாகூர் மார்க்கெட் ஆகியவற்றை தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மை செயல் அலுவலர் பரிதாபானு தலைமையிலான நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது இடைக்கால நிர்வாகிகளின் அறை, அவர்கள் பயன்படுத்திய கோப்புகள் உள்ள அலமாரிகள், பாதுகாப்பு பெட்டகம் ஆகியவற்றை பூட்டி சீல் வைத்து இடைக்கால நிர்வாகிகள் பணி மேற்கொள்ள தடை விதித்தனர்.

இதனை தொடர்ந்து தர்ஹா நிர்வாகத்தை தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மை செயல் அலுவலர் பரிதாபானு நிர்வகிப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இடைக்கால நிர்வாகிகள் பதவி வகித்த காலங்களில் செய்யப்பட்ட செலவினங்கள் குறித்தும் அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Share this News:

Leave a Reply