ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது? – பீதியை கிளப்பும் நத்தம் விஸ்வநாதன்!

Share this News:

சென்னை (19 ஜூன் 2021): ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது பற்றி சசிகலாவுக்கு மட்டுமே தெரியும் என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த கடந்த 2017ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா உறவினர்கள், சசிகலா, அமைச்சர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியது. அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஆஜராகுமாறு ஓபிஎஸ்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் ஓபிஎஸ் ஆஜராகவில்லை. இது குறித்து திமுகவினர் பல விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

அண்மையில் இது குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஜெயலலிதாவை இரும்பு பெண் என்கிறார்கள். ஆனால், அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த நேரில் ஆஜராக ஓபிஎஸ் மறுக்கிறார். மூன்று ஆண்டுகளாகியும் உண்மை ஏன் இன்னும் வெளிவரவில்லை?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், “ஜெயலலிதா மரணத்தில் ஏதோ நடந்துள்ளது, அது தெரியாததால் தான் ஓபிஎஸ் ஆஜராகவில்லை!” என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது பற்றி சசிகலாவுக்கு மட்டுமே தெரியும் என்றும் சசிகலாவால் அதிமுகவில் ஒரு சதவீதம் கூட பாதிப்பை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.


Share this News:

Leave a Reply