முதலில் அறிக்கை பின்பு மறுப்பு – மீண்டும் தமிழக அரசின் குளறுபடி!

Share this News:

சென்னை (29 ஜன 2020): பொதுத் தேர்வை முன்னிட்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினம் 1 மணிநேரம் சிறப்பு வகுப்பு நடத்தப்பட மாட்டாது என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அடிப்படையில் இதுவரை பள்ளிகள் நடைபெற்று வந்தனர். ஆனால் மத்திய அரசு அமைத்திருந்த கஸ்தூரிரங்கன் தலைமையிலான தேசியக் கல்விக்கொள்கை வடிவமைப்புக் குழுவின் வரைவு அறிக்கையும் கடந்த ஆண்டு வெளியானது. அந்த அறிக்கையில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து, மத்திய அரசின் கல்வித்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த முடிவு செய்து சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

ஆனால், இந்த நடைமுறையை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்கள் இந்த புதிய சட்டத்தை அமல்படுத்தி உள்ளன. தொடர்ந்து, நடப்புக் கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையில் தினமும் 1 மணிநேரம் சிறப்பு வகுப்பு நடத்தப்பட வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவித்து இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தற்போது பள்ளி கல்வித்துறை அதனை மறுத்துள்ளது. மேலும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எதுவும் நடத்தப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வெவ்வேறு பள்ளிகளில் நடைபெறும் என்று அறிவித்து பின்பு அதனையும் மறுத்தது மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே தேர்வு நடைபெறும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply