சென்னை (23 மார்ச் 2021): சசிகலா மீது திடீரென பாசமழை பொழிந்துள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
விருப்பமில்லையென்றபோதிலும் வேறு வழியின்றி எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளாராக முன்மொழிந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு ஆரம்பம் முதலே இருந்த வந்த நிலையில், எடப்பாடி தன்னை மட்டும் முன்னிலைப்படுத்துவதை ஓபிஎஸ் விரும்பவில்லை.
அதன் பின்னணியிலேயே, தனக்கென விளம்பரங்களை கொடுக்கும் ஓபிஎஸ், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில் சசிகலா மீது ஆரம்பம் முதலே தனக்கு வருத்தம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா காலமான பின்னர் அவரது மறைவில் சிலர் சந்தேகம் எழுப்பினர். இது போன்ற பிரச்சினைகளால் சசிகலாவுக்கு கெட்ட பெயர் ஏற்படும் சூழ்நிலை உருவானது. எனவே, நீதி விசாரணை நடத்தி அந்த அவப்பெயரை துடைக்க வேண்டும் என்று நினைத்து, அந்த சந்தேகத்தை போக்கவே, நீதி விசாரனை கேட்டேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சசிகலா, ஜெயலலிதாவுடன் சுமார் 32 ஆண்டுகள் இருந்துள்ளார். அவர்களுடன் நான் பயணித்துள்ளேன். எனவே, அவர் மீது எந்த சந்தேகமும் தனக்கு இல்லை என்றும் ஓபிஎஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.