சென்னை (28 மார்ச் 2022): தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பட்ஜெட்டில் ஏதேனும் தவறு இருப்பதாக கருதினால் அது அறியாமை என்றும் நான் பொய் சொல்வதாக நினைத்தால் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு மாநில பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய அண்ணாமலை தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்தார். அவர் தனது உரையில், “தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை ரூ.16,500 கோடி என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார். ஆனால், இறுதி நிலுவைத் தொகையையும் மத்திய அரசு வழங்கிவிட்டது” என்றார்.
இதற்கு பதிலளித்துள்ள பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் “தகுதியற்ற நபர்கள் பொது இடங்களில் தெரிவிக்கும் தவறான தகவல்களுக்கு பதிலளிப்பது என் வேலை இல்லை” என்றார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், ஏதேனும் தவறு இருப்பதாக கருதினால் அது அண்ணாமலையின் அறியாமை; நான் பொய் சொல்லி இருப்பதாக நினைத்தால் அவர் நீதிமன்றத்தை நாடலாம் என்றார்