தில்லி:(அக்டோபர் 06 ) ஆன் லைன் உணவு விநியோக நிறுவனம் ஸ்விக்கியுடன் கைகோர்த்து தெருவோர உணவு விற்பனையாளர்களின் வணிகங்களை ஆன்லைனில் கொண்டு சென்றுள்ளது மத்திய அரசு.
கடந்த ஜூன் மாதம் ஸ்விக்கியுடன் இணைந்து தெருவோர உணவு விற்பனையாளர்களின் வணிகங்களை ஆன்லைனில் கொண்டு சென்ற மத்திய அரசு விற்பனையாளர்களுக்கு ரூ.10,000 வரை மூலதனக் கடன் வழங்கப்பட்டு வருவதாகக் கூறுகின்றது.
இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்று நிலையில், தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது. பொதுவாக மக்களின் பொருளாதார நிலை மாறினாலும் குறிப்பாக, தெருவோர உணவு வியாபாரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லலை. அந்த வியாபாரிகளின் நிலை இன்னமும் அப்படியேதான் உள்ளது. கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை விரைவில் ஈடுகட்ட இயலாத சூழல் உள்ளதால், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற இலாகா அமைச்சகத்துடன் , ஆன் லைன் உணவு விநியோக நிறுவனம் ஸ்விக்கி, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டது.
இதன்படி,நுகர்வோருக்கு ஆன்லைன் அணுகலை வழங்குவதற்கும், வணிகங்களை வளர்க்க உதவுவதற்கும் ஸ்விக்கி, தெரு உணவு விற்பனையாளர்களுக்கு தளம் அமைத்துக் கொடுக்கும்.
பிரதான் மந்திரி ஸ்ட்ரீட் வெண்டார்ஸ் ஆத்மிர்பர் நிதி எனும் பெயரில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் அகமதாபாத், சென்னை, டெல்லி, இந்தூர் மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் இயங்கி வருகின்றது.
தெரு விற்பனையாளர்களுக்கும் பல்வேறு நவீன தொழில்நுட்பம் சார்ந்த வசதிகளை ஸ்விக்கி வழங்கும், மேலும், திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால், நாட்டின் பல பகுதிகளிலும் இது விரிவுபடுத்தப்படும்.