யூடூபர் மாரிதாஸ் கைதுக்கு சீமான் கடும் கண்டனம்!

Share this News:

சென்னை (10 டிச 2021): யூடூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதை தமிழகம் மொத்தமும் ஆதரித்து வரும் நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாரிதாஸ் கைதை கடுமையாக எதிர்த்துள்ளார்.

இதுகுறித்து சீமான் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

முப்படைகளின் தலைமை தளபதியின் ஹெலிகாப்டர் விபத்திற்கு தமிழகத்தை காஷ்மீருடன் இணைத்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக பாஜக ஆதரவு யூடியூபர் மாரிதாஸ் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது, கைது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தொடர்புகொண்டு பேசினோம், கண்டனக்குரலை பதிவு செய்தார்.

“மாரிதாஸ் கருத்து கோட்பாடுகளில் முழுமையாக முரண்படுகிறேன். ஆனால், தம்பி மாரிதாஸின் கைதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். ஒரு ஜனநாயக நாட்டில் எதையுமே பேசக்கூடாது என்று மாரிதாஸ் சார்ந்திருக்கும் பாஜக சொல்வதையும் ஏற்க முடியாது. திமுக எடுக்கும் முடிவையும் ஆதரிக்க முடியாது. கருத்து சுதந்திரத்திற்கு எதிராக கைது செய்தால் நாங்கள் என்னதான் பேசுவது? அதேபோல, தம்பி சாட்டை துரைமுருகனையும் வேண்டுமென்றே கைது செய்தார்கள். என்னிடம் ’உங்கக் கூடவே இருக்கார். எங்களுக்கு நெருக்கடி’ என்றார்கள் காவல்துறையினர். ’நானே அனுப்புகிறேன்’ என்று சரணடைய வைத்தேன். ஆனால், இந்த அரசு எவ்வளவு வன்மமாக இருக்கிறது என்பது அவனை நான் பிணையில் எடுக்க போராடும்போதுதான் தெரிந்தது. மாரிதாஸுக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அதேபோல, முதுகுளத்தூர் மணிகண்டன் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்ததில் தம்பி மாரிதாஸின் கருத்தை நானும் ஏற்கிறேன். நானும் தமிழக அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தேன். இதுமட்டுமல்ல, மீனவர் ராஜ்கிரண் உயிரிழப்புக்கும் தமிழக முதல்வர் மெளனமாகத்தான் இருந்தார். அவர் எதிர்கட்சியாக இருக்கும்போது பேசிய பேச்சுக்கும், முதல்வராக மாறியபின்பு பேசும் பேச்சுக்கும் நிறைய வேறுபாடுகளைப் பார்க்க முடிகிறது”.

“வானூர்தி விபத்துக்கு திமுகவையும் தமிழகத்தையும் இழுப்பது தவறு. இங்கு வானூர்தியை திமுகவா வாங்குகிறது? மாரிதாஸ் ஆதரவு கட்சிதான் வாங்குகிறது. இவர்கள் செய்யும் ஊழலுக்காக தரமற்ற வானூர்திகளை வாங்குகிறார்கள். இந்தப் பிரச்னையில் எனக்கு வெறுப்புதான் வருகிறது. ஒரு வானூர்தியைக்கூடவா தயாரிக்க முடியாத விஞ்ஞான அறிவில் இருக்கிறோம்? என்னடா கொடுமை? வெளிநாட்டில் வாங்கினோம் என்கிறார்கள். எந்த நாடு நமக்கு உண்மையாக விற்கும்?”.

“உண்மைதான். ஆனால், மாரிதாஸ் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு உண்மையாக இருக்கிறார். அவ்வளவுதான். அவர் என்னையும்தான் ரொம்ப விமர்சித்திருக்கிறார். நான் ஒன்றுமே சொல்லவில்லையே? நான் எங்க அம்மா, அப்பாவிடம் அன்பாக இருப்பதில் நீங்க எப்படி குறை சொல்வீங்க? அதுபோல்தான், மாரிதாஸ் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு விசுவாசமாக இருக்கிறார். அதற்காக, அவரை கைது செய்வது தவறு. எங்களின் தமிழ் தேசிய அரசியலையுமே விமர்சிக்க ஆள் இருக்கிறார்கள். ஆனால், அதற்கு காரணம் ’சீமான் பின்னாடி இவ்ளோ பேர் போறாங்களே’ என்பதுதான். ’நாங்க கருத்து சுதந்திரத்தை மதிக்கிறோம்… அது பண்ணுவோம்… இது பண்ணுவோம்’ என்று சொல்றார் முதல்வர் ஸ்டாலின். உண்மையிலேயே, கருத்து சுதந்திரத்தை மதிக்கிறாங்கன்னா என் பேட்டியை எடுத்து அவங்க டிவியில் போடுவாங்களா? அரசு என்பது அடிப்படை உரிமைகளை காப்பதற்காகத்தான் இருக்கவேண்டும்”.

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply