பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவிக்கரம் நீட்டிய தன்னார்வ அமைப்பு!

Share this News:

கரூர் (11 ஏப் 2020): லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏற்கனவே காய்கறிகளை இலவசமாக கொடுத்து வந்த வ.வேப்பங்குடி பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் தற்போது ஆதரவற்ற 150 நபர்களுக்கு அத்யாவசிய பொருட்களை கொடுத்து உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, 144 ஊரடங்கு தடை உத்திரவு நாடு முழுவதும் அமலில் இருக்கும் நிலையில், தமிழகத்தில், குறிப்பாக கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க கரூர் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கடவூர் வட்டம், வரவணை கிராமத்தில் இயங்கி வரும் வ.வேப்பங்குடி பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் சார்பில் அதே கிராமத்தில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் முதியோர் உதவித்தொகை வாங்கும் நபர்கள் என்று வரவணை கிராமத்தில் உள்ள 16 குக்கிராமங்களில் வசிக்கும் சுமார் 150 நபர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. வரவணை ஊராட்சி மன்ற தலைவரும், முன்னாள் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான மு.கந்தசாமி இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து இந்த திட்டத்தினை தொடக்கி வைத்தார்.

இதில் வ.வேப்பங்குடி பசுமைக்குடி தன்னார்வ ஒருங்கிணைப்பாளர் நரேந்திரன் ஆலோசனையின் படி, பசுமைக்குடி தன்னார்வலர்கள் பெ.கருணாநிதி, ர.வேல்முருகன், த.காளிமுத்து, ரா.பாலகிருஷ்ணன், பி.தங்கவேல், து.வெற்றிவேல், கா.கவிநேசன், பெ.ஆண்டியப்பன், ல.கார்த்திக், கோ.தங்கவேல், பி.முருகேஷன் ஆகியோர் வீடு, வீடாக சென்று கொரோனா வைரஸ் விழிப்புணர்விற்காக சமூக இடைவெளியை கடைபிடித்து வழங்கினர். கரூர் மாவட்டத்திலேயே ஆதரவற்றோர்கள் மற்றும் முதியோர் உதவித்தொகை வாங்குபவர்களுக்கு 5 கிலோ அரிசி, புளி ¼ கிலோ, பருப்பு ¼ கிலோ, மளிகைத்தூள்கள் 150 கிராம், பூண்டு ¼ கிலோ, சீரகம் 150 கிராம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும், அதுவும் 150 நபர்களுக்கு வழங்கப்பட்டதும் முதன்முறையாகும்.

மேலும், முன்னதாக கடந்த 18 தினங்களுக்கு முன்னதாகவே வ.வேப்பங்குடி பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் சமுதாய காய்கறி கூடத்தில் விளைந்த காய்கறிகளை இப்பகுதி மக்களுக்கு மட்டுமில்லாமல், கரூர் மாவட்ட அளவில் இலவசமாக விநியோகித்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply