சென்னை (08 ஜூன் 2020): அதிமுகவில் முக்கிய மாற்றங்கள் நடைபெறவுள்ளதாகவும் அதில் கட்சி மீது அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்துக்கு முக்கிய பதவி அளிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எதிர் வரும் சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு கட்சிப் பதவிகளில் சிலரை மாற்ற அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.
கட்சியில் சில மாவட்ட செயலாளர்களும் மாற்றப்பட உள்ளார்களாம். விரைவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இதுகுறித்து கட்சி அலுவலகத்தில் கலந்தாலோசித்து, அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டு, அறிவிப்பு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய அமைச்சரவையில்தான் இடம்பெற உதவ வேண்டும் என்று இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். ஆகியோரிடம் கேட்டுக்கொண்டிருந்தார் ராஜ்யசபா உறுப்பினரான வைத்திலிங்கம். இதனால் கட்சியின் தலைமை மீது கோபத்தில் இருந்த வைத்திலிங்கத்தை சரி செய்ய வேண்டும், டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் டெல்டா பகுதிகளை அவரது கைவசம் கொடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.