வாம்கோ புயல் புயலுக்கு 67 பேர் பலி!

Share this News:

மணிலா (15 நவ 2020): பிலிப்பைன்ஸை தாக்கிய வாம்கோ புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பெரும் பாதிப்பை சந்தித்து வரும் பிலிப்பைன்சில் இயற்கையின் ருத்ர தாண்டவமும் தொடருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2 மாதங்களாக பிலிப்பைன்சை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த புயல்கள் தாக்குகின்றன. இந்த மாத தொடக்கத்தில் கோனி என்ற சக்தி வாய்ந்த புயல் பிலிப்பைன்சின் கிழக்கு பிராந்தியங்களை கடுமையாக உலுக்கியது. இது இந்த ஆண்டு உலகின் மிகவும் சக்திவாய்ந்த புயல்களில் ஒன்றாக அமைந்தது.

இந்த புயலால் பிலிப்பைன்சில் 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிர்க்கதியாகி உள்ளனர். இந்த நிலையில் கோனி புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள் பிலிப்பைன்சை மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது. இது இந்த ஆண்டு பிலிப்பைன்சை தாக்கிய 21-வது புயலாகும்.

வாம்கோ என பெயரிடப்பட்ட இந்த சக்தி வாய்ந்த புயல் பிலிப்பைன்சின் தலைநகர் மணிலாவை புரட்டிப்போட்டுள்ளது. மேலும் மணிலாவில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புலாக்கன் மற்றும் பம்பங்கா ஆகிய மாகாணங்களிலும் இந்த புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் தொடங்கி 235 கி.மீ. வேகம் வரை சூறாவளி காற்று சுழன்றடித்தது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சரிந்தன. வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. புயலைத் தொடர்ந்து பேய் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. புயல் மற்றும் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. மாயமாகியுள்ள 12 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Share this News:

Leave a Reply