கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பு – ராணுவ வீரர்களுக்கு முதல்கட்ட சோதனை!

Share this News:

மாஸ்கோ (03 ஜூன் 2020): ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கபட்டுள்ளதாகவும், அதற்கான ஆரம்ப கட்ட சோதனை முறையாக ராணுவ வீரர்களுக்கு அந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரசை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றால் அதற்கு முதலில் தடுப்பூசி கண்டுபிடித்தாக வேண்டும். அதற்கான ஆராய்ச்சியில் உலக விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதில் கடும் போட்டியும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி ஆரம்ப கட்ட சோதனைகளை முடித்துக்கொண்டுள்ளது. அடுத்த கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கிற கட்டத்தை அடைந்துள்ளது.

அந்த வகையில் ரஷிய ராணுவத்தில் உள்ள 50 அதிகாரிகள் (தன்னார்வலர்கள்) இந்த பரிசோதனைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி ரஷிய ராணுவ அமைச்சகம் கூறுகையில், ரஷியாவில் உருவாக்கப்பட்டுள்ள தனித்துவமான கொரோனா தடுப்பூசியை செலுத்தி சோதிப்பதற்காக 5 பெண்கள் உள்ளிட்ட 50 ராணுவ அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்தது.

தன்னார்வலர்களின் முதல் குழுவுக்கு இன்று (புதன்கிழமை) மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் ரஷிய ராணுவ அமைச்சகத்தின் 48-வது மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வைத்து அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்படும்.

இங்குதான் எபோலா வைரஸ் தொற்று மற்றும் மெர்ஸ் வைரஸ் தொற்று ஆகியவற்றுக்கான தடுப்பூசிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்த்கது.

ரஷியாவில் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதிப்பது வரும் ஜூலை மாதத்தில் முடிவடையும் என்று ராணுவ அமைச்சகம் சொல்கிறது.


Share this News: