நீக்கப்படுவாரா தயாநிதி மாறன் – புயலை கிளப்பும் விவகாரம்!

Share this News:

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தலைமைச் செயலகத்தில் கிளப்பிய சலசலப்பு அலை இப்போதைக்கு ஓயாது போல! தயாநிதியைவிடவும் இதில் அதிகமாக சிக்கிக் கொண்டு, பழி சுமப்பவர் திருமாவளவன்.

திமுக.வுக்காக திருமாவளவன் பாரம் சுமப்பது இது முதல் முறையல்ல. 2009 ஈழ இறுதிப் போர் காலத்தில், அவர் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தது, கலைஞர் வற்புறுத்தலால் ராஜபக்‌ஷேவை சந்திக்கச் சென்ற குழுவில் இடம் பெற்றது, அதன் மூலமாக திமுக மீதான விமர்சனங்களுக்கு கேடயமாக தன்னை ஒப்படைத்தது, ராஜபக்‌ஷேவிடமே நேரடியாக கேலிக்கு உள்ளானது… என சிறுத்தைகளே திரும்பிப் பார்க்க விரும்பாத காலகட்டம் அது!

தற்போது டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக எம்.பி.க்கள் குழு கடந்த 12-ம் தேதி தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்தது. வெளியே வந்து, தலைமைச் செயலாளர் தங்களை உரிய முறையில் வரவேற்று குறை கேட்கவில்லை என ஆதங்கப்பட்டார் டி.ஆர்.பாலு. அப்போது நிருபர்களிடம் பேசிய தயாநிதி, ‘தாழ்த்தப்பட்டவங்களா நாங்கள்?’ என கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரம் சூறாவளியாக சுழலத் தொடங்கியதும், இதற்கு திருமாவளவன் ரீயாக்‌ஷன் என்ன? என்கிற பார்வையை பலரும் வீசினர். ‘தலைமைச் செயலாளர் குறித்து திமுக எம்.பி.க்கள் ஆதங்கப்பட்டது சரி. தாழ்த்தப்பட்டவர்களா? என பேசியதில் உள்நோக்கம் இல்லாவிட்டாலும், அது இந்த மண்ணின் மைந்தர்களை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இது தோழமைச் சுட்டுதல்’ என குறிப்பிட்டார் திருமா.

இந்த மென்மையாக அணுகுமுறைக்காகவும், திருமா மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. அவற்றை சிறுத்தைகள் சமாளிப்பதற்குள், ஒரு கார்ட்டூன் புதிதாக புயலைக் கிளப்பியது. மீடியாவில் பகிரக்கூடிய அளவில், தரமான கார்ட்டூன் அல்ல அது.

வர்மா கார்ட்டூனிஸ்ட் என்பவர் முகநூலில் பதிவிட்டிருக்கும் இந்த கார்ட்டூனுக்கு எதிராக சிறுத்தைகள் கொந்தளித்தனர். சமூக செயல்பாட்டாளரான எவிடன்ஸ் கதிர், ‘அந்த கார்ட்டூனை வரைந்தவர் மட்டுமல்ல, அதற்கு ஆதரவாக பதிவுகளை இடுகிறவர்கள் பட்டியலையும் விரிவாக எடுத்துக் கொண்டிருக்கிறோம். இது பற்றி போலீஸ் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். நிச்சயம் கடும் நடவடிக்கை எடுப்போம்’ என எச்சரித்தார். இதற்கிடையே திருமாவை மோசமாக சித்தரித்த கார்ட்டூனிஸ்ட் வர்மா தற்போது கைது செய்யப்பட்டதாக தகவல்.

இதேபோல மற்றொரு கார்ட்டூனிஸ்டான பாலா, வழக்கமான தனது பாணியில் திருமாவை இந்த விஷயத்தில் கிண்டல் செய்து சில பதிவுகளை இட்டார். இது சிறுத்தைகள் மத்தியில், தவறுதலான புரிதல்களை உருவாக்கியதாக தெரிகிறது. வர்மா என்கிற பெயரில் பாலா-தான் மோசமான கார்ட்டூனை வரைந்ததாக ஒரு பிரசாரம் அவர்களுக்குள் விதைக்கப்பட்டது. விளைவு, திருமா மீதான கார்ட்டூன் தாக்குதலுக்கு நிகராக பாலா மீது கார்ட்டூன் தாக்குதலை சிறுத்தைகளே முன்னெடுத்தனர்.

பாலாவின் செல்போன் எண் சிறுத்தைகளின் வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டு, மோசமான வசைபாடல்களும் அரங்கேறின.

திருமாவைத் தாக்கிய கார்ட்டூன், கருத்துச் சுதந்திர எல்லையைக் கடந்து ஆபாசத் தாக்குதலாக இருக்கிறது என கண்டனம் தெரிவித்திருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. மற்ற கட்சிகள் இதனை கண்டு கொள்ளவில்லை.

இது இப்படியிருக்க தயாநிதி மாறனின் பேச்சு உட்கட்சியிடையே புயலை கிளப்பியுள்ளது. ஏற்கனவே சன் டிவியில் ஸ்டாலினை விமர்சித்து வெளியிட்ட செய்தி இப்போது தயாநிதி மாறன் கட்சிக்கே வேட்டு வைக்கும் அளவுக்கு பேசியிருப்பது என தொடர்வதால் தயாநிதி மாறனை கட்சியை விட்டு விலக்க வேண்டும் என்ற குரலும் எழும்ப தொடங்கியுள்ளது.

-அன்பழகன்


Share this News: