இந்துத்துவ சித்தாந்தங்களோடு ஒப்பிட்டுப் பேசும் அந்த முதல் ஒப்பீடு எது..?
முதல் ஒப்பீடு : பர்மாவின் ஜண்டாயிசமும் இந்துத்துவாவும்
1962 முதல் 2011ஆம் ஆண்டு வரை பர்மாவில் இராணுவ ஆட்சி தான் நடைபெற்று வந்தது. இதற்கு இராணுவ ஜண்டா என்று பெயர். 1962ல் ஜெனரல் நீவின் என்பவன் ஆட்சியில் அமர்ந்தான். அதன் பிறகு தான் பர்மாவிலுள்ள ராக்கைன் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹிங்கியாவின் பூர்வீக குடிகளான ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகள் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தன. ரோஹிங்கியா முஸ்லிம்களின் மீதான அடக்குமுறைகள் அதிகரித்து அவர்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாக்கப்பட்டார்கள்.
ரோஹிங்கியாக்கள் பர்மாவைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் அந்நியர்கள். அவர்களுக்கும் பர்மாவிற்கும் சம்பந்தமில்லை எனும் உணர்வு நாடு முழுவதிலும் ஏற்படுத்தப்பட்டது. அவர்கள் பங்களாதேஷத்திலிருந்து வந்தவர்கள். ஆகவே அவர்களை மீண்டும் பங்களாதேஷத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் ரோஹிங்கியாக்களே ஒழுங்காக பங்களாதேஷத்திற்கு சென்று விடுங்கள் என்றும் பல அதிகாரிகள் ஆவேசமாக பேச ஆரம்பித்தனர்.
இன்று இதே வழிமுறையைத் தான் பாஜக அரசும் கையிலெடுத்துள்ளது. ஒவ்வொரு நாளும் பாஜகவைச் சேர்ந்த எம்.பி.-க்களும் எம்.எல்.ஏ.-க்களும், முஸ்லிம்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். அவர்களை பாகிஸ்தானுக்குத் துரத்த வேண்டும் என்றும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.
பர்மா-வில் இதன் தொடர்ச்சியாகத்தான், ரோஹிங்கிய முஸ்லிம்களை பர்மாவிலிருந்து வெளியேற்றுவதற்காக தொடர்ச்சியாக பல்வேறு சட்டங்களை இயற்றி தன்னுடைய அரச பயங்கரவாதத்தை வெளிக்காட்டியது, ஜண்டாயிசம் (இராணுவ ஜண்டா)! அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
ஆபரேஷன் டிராகன் கிங்-Operation Dragon King
பர்மாவில் 1977ஆம் ஆண்டு ஆபரேஷன் டிராகன் கிங் எனும் பெயரில்
ஒரு திட்டத்தை அமல்படுத்தியது இராணுவ ஜண்டா. அது என்ன, ஆபரேஷன் டிராகன் கிங்? இதன் நோக்கம், தேசிய மக்கள் தொகையை பதிவு செய்வதற்கு முன்னர் பர்மாவிலுள்ள வடக்கு அரக்கானில் குடிமக்களை பதிவு செய்து, அங்குள்ள ரோஹிங்கிய முஸ்லிம்களை மட்டும் வெளிநாட்டினர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட வேண்டும் என்பதே!
இதற்காக குடிவரவு அதிகாரிகளும் இராணுவ வீரர்களும் மும்முராக வேலை செய்தனர். இதன் பிறகு ரோஹிங்கிய முஸ்லிம்கள் பர்மிய படை வீரர்களாலும் குடியுரிமை அதிகாரிகளாலும் சுற்றி வளைக்கப்பட்டனர்.
ரோஹிங்கிய முஸ்லிம்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாயினர். பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டனர். பலர் கொல்லப்பட்டனர். இதன் மூலம் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டார்கள். மற்றவர்களை பர்மியர் என்றும் ரோஹிங்கிய முஸ்லிம்களை பர்மியர் அல்லாதவர்கள் (வெளிநாட்டினர்) என்றும் அதிகாரப்பூர்வமாக குறிப்பிடத் தொடங்கினர்.
இதில் குறிப்பிடத்தக்க அமசம் என்னவெனில், பர்மாவிலுள்ள இராணுவ ஜண்டாக்கார கொடுங்கோலர்கள், ஆபரேஷன் டிராகன் கிங்கை தனியாகவும் தேசிய மக்கள் தொகை பதிவை தனியாகவும் செய்தார்கள்.
ஆனால் இந்தியாவில் இந்துத்தவா சித்தாந்தத்தை கொண்டு ஆட்சி செய்து வரும் பாஜக அரசு ஆபரேஷன் டிராகன் கிங் எனும் சட்டத்தை என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டோடு சேர்க்க முயற்சி செய்கிறது. 2011-ஆம் ஆண்டு இந்தியாவில் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் கேட்கப்பட்ட கேள்விகளோடு இன்னும் சில கூடுதல் கேள்விகளை இணைத்து 2020ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தொடங்க திட்டமிட்டார்கள். புதிதாக சேர்க்கப்படவிருக்கும் கேள்விகளெல்லாம் மிகவும் ஆபத்தான கேள்விகளாக உள்ளன.
அதில்,
*இறுதியாக நீங்கள் எங்கு வசித்தீர்கள்?
*உங்களது அப்பா அம்மா எங்கு பிறந்தார்கள்?
*ஓட்டுநர் உரிமம் எண், ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றை கேட்க விருக்கிறார்கள்.
இதில் பெற்றோர் பிறந்த இடம் எது? என்ற கேள்வி மிகவும் ஆபத்தானது. தற்போது வாழ்பவர்களில் பலருக்கு பிறப்பு சான்றிதழே இல்லை. அப்படியிருக்கும்போது பெற்றோரின் பிறப்பு சான்றிதழுக்கு எங்கே போவது? பெரும்பாலான மக்களால் இதற்கான ஆதாரத்தை காட்ட முடியாது. யாரால் ஆதாரம் காட்டப்படவில்லையோ அவர்கள் சந்தேகத்திற்குறிய நபராக குறிக்கப்படுவார்கள். இதன் மூலம் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
இந்தியா-வில் இவ்வாறு திட்ட அமல் மறைமுகமாக இருக்க பர்மா-வின் அடுத்தகட்ட நடவடிக்கை எவ்வாறு இருந்ததது, நாளை பார்ப்போம்..!
பகுதி-1 பகுதி-3 பகுதி-4 பகுதி-5