சென்னை (09 பிப் 2020): நடிகர் விஜய்க்கு எதிராக பாஜகவினர் போராடுவதற்கு பாஜகவில் சமீபத்தில் இணைந்துள்ள இயக்குநர் பேரரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதால் நடிகர் விஜய் தேசிய அளவில் பேசுபொருளானார்.
ஒரு வழியாக வருமான வரித்துறை சோதனை முடிந்து மாஸ்டர் படப்பிடிப்பு மீண்டும் நெய்வேலியில் தொடங்கி இருக்கிறது. ஆனால், பாஜக விடுவது போல் இல்லை. என்எல்சி பகுதிக்கே சென்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த ரசிகர்களும் குவிய.. கடைசியில் அந்த விவகாரம் சர்ச்சையில் முடிந்திருக்கிறது. ரசிகர்கள் இப்பவும் கடும் கோபத்தில் இருக்க… விஜய் தாம் பாட்டுக்கு அடுத்த காட்சியில் நடிக்க சென்றுவிட்டார்.
இந்நிலையில் விஜயை வைத்து இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் பேரரசு சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். தற்போது அதில் இருந்து கொண்டே விஜய்க்கு ஆதரவாகவும், கட்சிக்கு எதிராகவும் பேசியிருக்கிறார்
இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:
நெய்வேலியில் விஜய் படப்பிடிப்பில் பாஜக வினர் போராட்டம் தேவையற்றது! விஜய் நடிகர், அரசியல்வாதி அல்ல! இந்தமாதரி செயல்பாடுகள் பாஜகவின் மீது மக்களுக்கு வெருப்பை உண்டாக்கும்! அவருடைய கோடானுகோடி ரசிகர்களுக்கு மனவேதனயை தரும். நாட்டில் போராட வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்கு! என்று தெரிவித்துள்ளார்.
பேரரசின் கருத்துக்கு ஆதரவும் அதேவேளை எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.