சென்னை (16 ஏப் 2022): கதையில்லாமல் மாஸ் ஹீரோவை வைத்து படம் எடுத்தால் ஓடிவிடும் என்ற கணக்கு பீஸ்ட் படத்தில் தவறாகிப் போனது படக்குழுவினருக்கு.
படம் வெளியான முதல் காட்சியிலேயே படத்திற்கு எதிராக கிளம்பிய பாதக விமர்சனங்கள் காரணமாக டிக்கெட் விற்பனை ஸ்தம்பித்துப் போனது.
தமிழ்நாட்டில் பீஸ்ட் ஓடினாலே போதும் என நினைத்த நடிகருக்கு போட்டியாக வந்த பக்கத்து மாநில படம் கே.ஜி.எப்.-2, மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. தியேட்டர் உரிமையாளர்களும் திடீரென காட்சிகளை குறைத்து கேஜிஎப் படத்துக்கு கொடுத்து வருவதால் தனது குழுவினரை அழைத்து ஆலோசனை போட்டுள்ளார் படத்தின் நாயகன்.
போதாதற்கு முஸ்லிம்களின் எதிர்ப்பையும் படம் சந்தித்துள்ளது. துப்பாக்கி படத்தைப் போல இதற்கு இலவச விளம்பரம் கிடைக்கும் என எதிர்பார்த்த படக்குழுவினருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.
விஜயகாந்த், அர்ஜுன் போன்ற நடிகர்கள் நடித்து டப்பாவுக்குள் போன அதே இத்துப்போன கதையை தேர்ந்தெடுத்து நடித்ததால், விஜய்யின் ரசிகர்களே படத்தை பார்த்துவிட்டு அதிருப்தியில் உள்ளனர்.
ஆரம்பத்தில் பீஸ்ட் படத்திற்கு அதிக தியேட்டர்களும், கேஜிஎப்-2 படத்துக்கு குறைவான தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டு இருந்தன. ஆனால் ரசிகர்கள் அதிருப்தியை தொடர்ந்து பல தியேட்டர்கள் அப்படியே பல்டி அடித்து பீஸ்ட் படத்தை தூக்கி விட்டு கேஜிஎப்-2 படத்தை அதிக காட்சிகளில் திரையிட்டு வருகின்றனர்.