தன் முதல் படம் முதலே பல புதிய விஷயங்களையும், புரட்சி கருத்துக்களையும் மக்கள் மனதில் பதிய வைத்தவர் தான் பா.ரஞ்சித். அவர் இயக்கத்தில் 5வது படமாக சார்பட்டா பரம்பரை இன்று திரைக்கு வந்துள்ளது.
ஆரம்பத்தில் கை ஓங்கி நின்று சார்பட்டா பரம்பரை காலப்போக்கில் இடியாப்ப பரம்பரையிடம் தோற்றுக்கொண்டே வருகிறது. ஒருநாள் பசுபதி கடைசியாக ஒரு சண்டை இதில் நான் தோற்றால், சார்பட்டா பரம்பரை இனி பாக்ஸிங்கே போடாது என சவால் விடுகிறார்.
அவர் சவாலுக்குள் ஆர்யா எப்படி வந்தார், வந்து சார்பட்டா பரம்பரைக்காக வெற்றியை தேடி தந்தாரா என்பது மீதிக்கதை.
ஆர்யா ஒரு கதைக்காக எவ்வளவு தன்னை அர்பணிக்கின்றார் என்பதை படத்திற்கு படம் நிரூபித்து வருகிறார், உடம்பை இரும்பாக்கி அவர் சண்டையிடும் போது அத்தனை யதார்த்தம், இன்னும் 10 பேரை அவர் அடித்தால் கூட நம்பலாம் என்பது போல் உள்ளது. இரண்டாம் பாதியில் ரவுடிசம் செய்து குடித்து தன் உடல், மனம் என அனைத்தும் வலுவிழந்து அவர் இருக்கும் காட்சிககும் அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார்.
படத்தில் இவர் நடித்தார் அவர் நடித்தார் என்பதை விட, கபிலன், ரங்கன் வாத்தியார், வேம்புலி, ராமன், வெற்றி என கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர்.
அதிலும் டான்ஸிங் ரோஸ் என்று ஒரு குத்துச்சண்டை வீரர் வருகிறார். அட யப்பா, எங்கையா இவர புடிச்சீங்க, இப்படியெல்லாம் கூடவா சண்டை செய்வார்கள் என்பது போல் மிரட்டியுள்ளார், நீங்களே பாருங்கள்.
பாக்ஸிங் என்பதை ஒருவரை நல்வழிப்படுத்தும், ஆனால், அதே பாக்ஸிங் வெளியில் பகையை உண்டாக்கி, அந்த கலையை ரவுடிசத்திற்கு பயன்படுத்தி எப்படி வாழ்க்கை சீரழிகிறது என்பதை ரஞ்சித் நம்மை அருகில் அழைத்து உட்கார்ந்து பாடமெடுத்துள்ளார்.
குறிப்பாக குடித்து விட்டி மனைவியை அடிக்கும் ஆர்யா, அடுத்த நாள் மனைவி காலில் விழுந்து கெஞ்சி மன்னிப்பு கேட்க, அதற்கு மனைவியும், உன்ன விட்டு எங்கப்ப போறது, இந்த புடிச்சா டீய குடி, இல்லாட்டி இந்த சாரயம் அத குடி என்று சொல்லுமிடம் ரசிக்க வைக்கிறது.
படம் பல வருடங்களுக்கு முன்பு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் நடக்க, அப்போது இருந்த கட்சி தலைவர்களை அப்படியே அவர்கள் பெயர் சொல்லி காட்டியது மற்றும் எமர்ஜன்ஸி உத்தரவு என பல கால நிகழ்வுகளை தன் கதைக்கு சாதகமாக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.
படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு, அத்தனை கூட்ட நெரிசலையும் அவ்வளவு அழகாக படம்பிடித்துள்ளனர்,
பா.ரஞ்சித் கமர்சியல் ஃபார்முலாவிலிருந்து வெளியேறி மீண்டும் அவரது பாணியை கையில் எடுத்துள்ளார். .