மருத்துவத்துறைக்கு எதிராக பாபா ராமதேவ் மீண்டும் திமிர் பேச்சு!

Share this News:

புதுடெல்லி (26 மே 2021): இந்திய மருத்துவர் சங்கத்துக்கு எதிராக பாபா ராம்தேவ் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் அலோபதி மருத்துவமுறை முட்டாள்தனமானது; அலோபதி மருந்துகளால்தான் பல லட்சக்கணக்கானோர் கொரோனாவுக்கு பலியாகினர். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் 10,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்தனர் என யோகா குரு என தம்மை அழைத்துக் கொள்ளும் பாபா ராம்தேவ் பேசிய வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதில் மத்திய அரசு தலையிட்டும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. இந்திய மருத்துவர் சங்கத்தின் உத்தரகாண்ட் மாநில கிளை, ராம்தேவ் தமது கருத்துக்கு 15 நாட்களில் எழுத்துப்பூர்வமான மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில் ரூ1,000 கோடி இழப்பீடு தர வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீஸுக்கு பதில் சொல்லாமல், ராம்தேவின் கூட்டாளியான ஆச்சார்யா பாலகிருஷ்ணா, இந்திய மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜான்ரோஸ் ஜெயலால், இந்தியாவையே கிறிஸ்வத மதம் மாற்றமாக்க முயற்சிக்கிறார் என பகீர் புகார் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்திய மருத்துவர் சங்கம் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில், மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி வழிமுறைகளைப் பின்பற்றியும் மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்றும் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள்தான் முதலில் தடுப்பூசி போட்டுக் கொண்டோம். மத்திய அரசின் வழிமுறைகளைப் பின்பற்றியே சிகிச்சை அளித்து வருகிறோம். ஆனால் ராம்தேவ், கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பொய்யான பிரசாரம் செய்கிறார். ஆகையால் அவர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.

தற்போது ராம்தேவ் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், என்னை யாராலும் கைது செய்ய முடியாது.. உன்னால மட்டும் அல்ல.. உங்க அப்பனால கூட கைது செய்ய முடியாது என பேசுவதாக இடம்பெற்றுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply