அலிகார் (13 மார்ச் 2022): உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகாரில் உள்ள ஒரு முக்கிய கல்லூரியில் “பரிந்துரைக்கப்பட்ட சீருடை” அணியாமல் வளாகத்திற்குள் மாணவர்கள் நுழைய ‘தடை’ அறிவிக்கப் பட்டுள்ளது. ஹிஜாப் அணிந்திருந்த முஸ்லிம் பெண்களை கல்லூரிக்குள் நுழைய கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது.
அலிகார் ஸ்ரீ வர்ஷ்னி கல்லூரியில் சனிக்கிழமையன்று வகுப்பிற்குச் செல்லும் போது மாணவிகள் ஹிஜாப் அணிய வேண்டாம் என்று கல்லூரி நிராகம் வலியுறுத்தியுள்ளது. இதனால் பல மாணவிகள் வகுப்பிற்குச் செல்லாமல் வீடு திரும்பினர்.
இதுகுறித்து B.Sc. இறுதியாண்டு படிக்கும் மாணவி ஒருவர் கூறுகையில், கல்லூரி வளாகத்திற்குள் நுழையும் போது தான் அணிந்திருந்த பர்தாவை கழற்றுமாறு கல்லூரி நிர்வாகம் முதலில் கூறியதாகவும், பின்னர் ஹிஜாபை கழற்றுமாறு கூறியதாகவும் கூறினார்.
“எங்கள் ஹிஜாப்பில் அவர்களுக்கு ஏன் பிரச்சனை என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஹிஜாப் அணியாமல் எங்கும் செல்ல நான் தயாராக இல்லை. மேலும் கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் அணிந்து எங்களை வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை” என்று அவர் கூறினார்.
கல்லூரியின் நிர்வாக அதிகாரி பீனா உபாத்யாயா கூறுகையில், எங்கள் கல்லூரியில் ஆடைக் கட்டுப்பாடு உள்ளது. இதனை நாங்கள் மாணவிகளுக்கு நினைவூட்டுவதாகவும், அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.
கல்லூரி தாளாளர் அனில் வர்ஷ்னி கூறியபோது, “ஆடைக் குறியீடு ப்ராஸ்பெக்டஸில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கல்லூரியின் விதிமுறைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆடைக் கட்டுப்பாடுகள் இனி இன்னும் தீவிரத்துடன் செயல்படுத்தப்படும் என்று மாணவர்களுக்கு இப்போது தெளிவாக கூறப்பட்டுள்ளது” என்றார்.