கொரோனா வைரஸ் பாதிப்பால் டெல்லி பாஜக தலைவர் சஞ்சய் சர்மா பலி!

Share this News:

புதுடெல்லி (11 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் டெல்லி பாஜக தலைவர் சஞய் சர்மா உயிரிழந்துள்ளார்.

டெல்லியில் கொரோனா வைரஸ் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் டெல்லி பாஜகவின் சேர்மன் கமிட்டி தலைவராக இருந்த சர்மா, கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

சஞ்சய் சர்மா மறைவுக்கு டெல்லி பாஜக பொதுச் செயலாளர் ராஜேஷ் பாட்டியா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ஊரடங்கு காலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்த பாஜக டெல்லியின் குழுத் தலைவர் சஞ்சய் சர்மா கொரோனா காரணமாக இறந்துவிட்டார். அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதோடு, குடும்பத்தினருக்கும் அவரது இழப்பை தாங்கும் சக்தியைக் கொடுக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். டெல்லி பாஜக தலைவர் நீல்காந்த் பக்ஷியும் சஞ்சய் சர்மா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இதுவரை 31,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 900 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். நகரின் சுகாதார உள்கட்டமைப்பு குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. போதுமான படுக்கைகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும் மருத்துவமனைகள் நோயாளிகளை அனுமதிக்கவில்லை என்று பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.


Share this News: