தில்லி (24 ஜூலை 2020): தில்லியிலுள்ள இந்தியாவின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19 வயது இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஏறக்குறைய 20 கால்பந்து மைதானங்களின் அளவை ஒத்த, உலகிலேயே மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் ஒன்று தெற்கு தில்லி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 10,000 பேர் வரை சிகிச்சை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் தற்போது 250 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனா பாதித்த 14 வயது சிறுமி ஒருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே மையத்தல், 19 வயது இளைஞன் ஒருவனும் சிகிச்சை பெற்று வருகின்றான். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்படட நிலையில், அவ்விருவரும் பேசி பழகியுள்ளனர். இந்நிலையில், கழிவறை இருக்கும் பகுதிக்கு சிறுமியை வரச் சொல்லியுள்ளான் அந்த இளைஞன். சிறுமியும் அங்கு சென்றுள்ளார். கழிவறையில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான், அந்த இளைஞன்.
அதிகாரிகள், பாதுகாவலர்கள் யாரும் பார்த்துவிடாமல் இருக்க, அந்த இளைஞன் அவனது நண்பனை வெளியே நிற்க வைத்துள்ளான். வெளியில் காவலுக்கு நின்ற இளைஞன், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை மொபைலில் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து சிறுமி அதிகாரிகளிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சிறுமி வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அந்த 19 வயது இளைஞனை காவல்துறையினர் கைது செய்து, சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர அவ்விருவருடைய அடையாள விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இச்சம்பவம் நாட்டில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மை மற்றும் சமூக அவலத்தையும் குறித்து பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது என்பது உண்மை.
படம் உதவி:Deccan Chronicle
-இளவேனில்