பெங்களூரு (11 ஆக 2020): விபத்தில் இறந்த மனைவி தத்ரூபமாக அதே வடிவில் வீட்டுக்குள் இருக்க, குடும்பமே மகிழ்ச்சிக் கடலில் உள்ளது.
இதுகுறித்த சுவாரஸ்ய சம்பவம் இதோ:
கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் வணிக வளாகம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் பலியானார்.
இதனை அடுத்து கிருஷ்ணன் தன்னுடைய இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். அவர் தற்போது புதிதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். இந்நிலையில் அந்த வீட்டின் புதுமனை புகுவிழா திங்கள் கிழமை சிறப்பாக நடைபெற்றது.
அந்த வீட்டில் தன்னுடைய இறந்த மனைவியைப் போன்றே மெழுகுச் சிலை ஒன்றை அமைத்து அதை புது வீட்டின் நடுவில் வைத்துள்ளார் கிருஷ்ணன். இதனை அந்த விழாவிற்கு வந்த அவரது உறவினர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். புதிதாக பார்ப்பவர்களுக்கு அது உண்மையான பெண் என்று நினைக்கும் அளவுக்கு சிலை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணனின் மனைவி மரணிக்கும் தருவாயில், தனக்காக வீட்டில் ஒரு சிலை அமைக்க வேண்டும் என்று கூறியதாகவும், மனைவியின் ஆசைப்படி சிலை வைத்ததாகவும் கணவர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
“தங்கள் தாயார் உயிருடன் வந்ததைப் போல் உணர்கின்றோம்” என்று கிருஷ்ணனின் மகள்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்கள். இந்த நிகழ்வால் குடும்பமே மகிழ்சியில் உள்ளது.