புதுடெல்லி (28 டிச 2021): ‘இந்து எதிர்ப்புப் பாடல் ஒன்று இசுலாமியர்களால் இயற்றப்பட்டது’ என்ற தவறான தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான காட்சிகள் தயாராகி வருகின்றன. அதேபோல முஸ்லிம்களுக்கு எதிரான போலியான தகவல்களும் பரவ ஆரம்பித்துள்ளன.
அந்த வகையில் தேர்தலுக்கு முன்பு “இந்து விரோத உணர்வைத் தூண்டுவதற்காக முஸ்லீம்களால் இயற்றப்பட்டது” என்ற கூற்றுடன் ஒரு பாடல் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் பாடலின் இசையமைப்பாளர் ஒரு இந்து என்றும் அவர் முஸ்லிம் அல்ல என்றும் தெரியவந்துள்ளது.
நவம்பர் 7 ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட 29 வினாடிகள் கொண்ட அந்தக் காணொளியில் இந்தப் பாடல் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தி மொழி வரிகளில் உள்ள அந்த பாடல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது: “சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ராமர் கோவில் கட்டுவது நிறுத்தப்படும், முஸ்லிம் கொடிகள் பறக்கும், காவி (இந்து) கொடிகள் கீழே இறக்கப்படும்” என்பதாக அந்தப் பாடல் வரிகள் உள்ளன.
ஆனால் உண்மையில் அந்தப் பாடல் வேண்டுமென்றே முஸ்லிம்கள் மீது பழி சுமத்தும் வகையில் பகிரப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.