பெங்களூர் (05 ஜூலை 2022):பெங்களூரில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளான நிலையில் அவரது கொலை வழக்கு விசாரணை திங்கள்கிழமை நகரின் கீழ் நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியது.
கடந்த செப்டம்பர் 5, 2017 அன்று, பத்திரிக்கையாளரும் ஆர்வலருமான கவுரி லங்கேஷ் தெற்கு பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தின் முன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நவீன் குமாருக்கு எதிராக முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நவம்பர் 23, 2018 அன்று, எஸ்ஐடி கூடுதல் 9,235 பக்க குற்றப்பத்திரிகையை முதன்மை சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இரண்டாவது குற்றப்பத்திரிகையில் 18 பேர் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி கவிதா லங்கேஷிடம் வழக்கறிஞர்கள் தீவிர குறுக்கு விசாரணை நடத்தினர். கௌரி கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்துத்துவாக் குழுக்களின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் கவனத்தைத் திசைதிருப்புவதை நோக்கமாகக் கொண்திருந்தனர்.
இந்த வழக்கை வாதிடும்போது, கொல்லப்பட்ட பத்திரிகையாளருக்கு நக்சல்களுடன் தொடர்பு இருப்பதாக நிறுவ முயன்றனர். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (SIT) அறிக்கையின்படி, கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 18 பேர் ரகசியக் குழுவைச் சேர்ந்தவர்கள். “இந்து விரோதிகள்” என்று கருதப்பட்டவர்களை அவர்கள் குறிவைத்ததாக தி நியூஸ் மினிட் தெரிவித்துள்ளது.
கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரில் தாதா என்ற விகாஸ் பாட்டீல் என்ற ஒருவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.