போராட்டம் நடத்துவது தீவிரவாதமாகாது – சிஏஏ போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன்!

Share this News:

புதுடெல்லி (16 ஜூன் 2021): போராட்டம் நடத்துவது தீவிரவாதம் இல்லை என்று கூறிய டெல்லி உயர் நீதிமன்றம் நட்டாஷா நிர்வால், தேவங்கனா கலிட்டா, ஆஷிப் இக்பால் ஆகிய சிஏஏ போராட்டக்காரர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஒன்றிய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற சிஏஏ போராட்டம் தொடர்பாக நட்டாஷா நிர்வால், தேவங்கனா கலிட்டா, ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர் ஆஷிப் இக்பால் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஆண்டு மே மாதம் இவர்கள் ஐவரும் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ஜாமீன் கோரி இவர்கள் தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ” நாட்டில் உள்ள அனைவருக்கும் போராட்டம் நடத்தும் உரிமையை அரசியலமைப்பு வழங்கியுள்ளது. எனவே, போராட்டம் நடத்துவது தீவிரவாதமாகாது என்பதை உணர வேண்டும்.

போராட்டத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையே வேறுபாடு உள்ளது, ஐபிசியின் கீழ் வரும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சர்வ சாதாரணமாகப் பயங்கரவாதச் சட்டம் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. போலீசாரின் பதிவு செய்துள்ள வழக்குகள் தெளிவானதாக இல்லை. பயங்கரவாத தடுப்பு சட்டங்களை நியாயமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். அது போராட்டம் நடத்துபவர்களை அநியாயமாகத் தண்டிக்கப் பயன்படுத்தக் கூடாது” என்றனர்.

இதனை அடுத்து சிஏஏ போராட்டத்தில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ள நட்டாஷா நிர்வால், தேவங்கனா கலிட்டா, ஆஷிப் இக்பால் ஆகியோருக்கு 50 ஆயிரம் ரூபாய் தனிப்பட்ட பிணையுடன் ஜாமீன் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே இந்த உத்தரவை எதிர்த்தது டெல்லி போலீஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply