டெல்லி போர்க்களத்தில் கைவிடப்பட்ட இந்து மணப் பெண்ணுக்கு கை கொடுத்த முஸ்லிம் இளைஞர்!

Share this News:

புதுடெல்லி (27 பிப் 2020): டெல்லி வன்முறையின் நடுவே மணமகனால் கை விடப்பட்ட இந்து பெண்ணை முஸ்லிம் இளைஞர் முன்வந்து திருமணம் செய்துள்ளார்.

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையாளர்கள் நுழைந்ததால் டெல்லி கலவர பூமியானது. இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் டெல்லி சாந்த் பாக் பகுதியில் உள்ள சாவித்ரி பிரசாத் (23) என்ற பெண்ணுக்கும் மற்றொரு இந்து இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்து முறைப்படி செவ்வாய் அன்று திருமணத்திற்கு மணமகள் அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்தார்.

ஆனால் திங்கள் கிழமை மாலை மணமகன் வீட்டார் திடீரென திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் சாவித்ரியை திருமணம் செய்ய விரும்பவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதி என்பதாலும், டெல்லியில் பிரச்சனை நடைபெறுவதால் சாவித்ரியை திருமணம் செய்ய விரும்பவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சாவித்ரியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். திருமணத்திற்கு அனைவரும் அழைக்கப்பட்டு உறவினர் நண்பர்கள் எல்லோரும் வந்து கொண்டு இருக்க, செய்வதறியாது திகைத்தார் சாவித்ரியின் தந்தை.

கனவுகளுடன் காத்திருந்த சாவித்ரி பிரசாத்தும் கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்ததாக அப்பகுதி முஸ்லிம் பெண் சமீனா பேகம் தெரிவித்தார்.

மேலும் நாங்கள் இருக்கிறோம் கவலை பட வேண்டாம் என்று அப்பகுதி முஸ்லிம்கள் சாவித்ரியின் தந்தை போதே பிரசாத்திடம் தெரிவித்தனர். இதனை அடுத்து சாவித்ரியை திருமணம் செய்ய குல்ஷான் என்ற இளைஞர் பெற்றோர் சம்மதத்துடன் முன் வந்தார். உடனே குல்ஷானுக்கும் சாவித்ரி பிரசாத்துக்கும் குறித்த நாளில் முஸ்லிம் முறைப்படி திருமணம் நடைபெற்றது. மணமக்களை அப்பகுதி மக்கள் மகிழ்வோடு வாழ்த்தி, புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

இப்போது நாங்கள் எல்லோரும் ஒரே குடும்பம், எங்களுக்குள் மதம் என்ற பாகுபாடு இல்லை என்கிறார். சாவித்ரியின் அண்ணி பூஜா.

டெல்லி போர்களத்தில் இந்த திருமண நிகழ்ச்சி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Share this News:

Leave a Reply