லடாக் (09 ஜூன் 2020): இந்தியா-சீன அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து, லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து இரு நாட்டு ராணுவங்களும் பின்வாங்கியுள்ளன.
கடந்த சில நாட்களாக லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவம் தங்களது படைகளை குவித்து வந்த நிலையில், அங்கு பதற்றம் நிலவியது. இந்த பதற்றத்தை தணிக்கும் விதமாக, இதற்க்கு முன்னே இந்தியா-சீனா இடையே ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை “மால்டோ” என்ற இடத்தில் நடந்தது.
அந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இன்று இருநாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில், கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு, பிபி -15 மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் ஆகியவற்றிலிருந்து சீன இராணுவம் தனது துருப்புக்களை 2 முதல் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு பின் அழைத்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல இந்திய தரப்பு தனது சில துருப்புக்களையும் வாகனங்களையும் அந்த பகுதிகளிலிருந்து திரும்ப அழைத்து வந்துள்ளது.
மேலும் இரு நாடுகளும் தங்களது சகாக்களுடன் ஹாட்லைன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.