பாஜக எம்பிக்கு எதிரான இந்திய மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் – ஒன்றிய அரசுக்கு நெருக்கடி!

Share this News:

புதுடெல்லி (20 ஜன 2023): பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியும் ஆன பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் அவரை பதவியில் இருந்து நீக்கம் வேண்டும் எனக்கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற வினேஷ்போகத், சரிதா, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக் ஷிமாலிக் உள்ளிட்ட 30 மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.

நேற்று 2-வது நாளாக வீராங்கனைகள் போராடிய நிலையில் காலையில் சில மல்யுத்த வீரர்களை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சக அலுவலக அதிகாரிகள் அழைத்து பேசினர். இதில் திருப்தி ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

இந்நிலையில் மல்யுத்த வீரர்களுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

நேற்று இரவு 10 மணிக்கு ஆரம்பமான கலந்துரையாடல் நான்கரை மணி நேரங்கள் நீடித்தது. டெல்லியில் உள்ள அனுராக் தாக்கூர் இல்லத்தில் இன்று அதிகாலை 2 மணி வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

மேலும், பிரிஜ் பூஷன் சரண் சிங் தன்னை ராஜினாமா செய்ய 24 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தவறினால் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா அறிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply