படுத்தபடி வாதிட்ட வழக்கறிஞர் – கண்டித்த உச்ச நீதிமன்ற நீதிபதி!

Share this News:

புதுடெல்லி (21 ஜூன் 2020): உச்ச நீதிமன்ற விசாரணை ஒன்றில் ஆன்லைன் விசாரணையில் வழக்கறிஞர் ஒருவர் கட்டிலில் படுத்தபடி ஆஜரானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நீதிமன்ற விசாரணைகள் காணொலி காட்சி மூலம் நடந்து வருகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் நடத்திய காணொலி காட்சி அமர்வு ஒன்றில் வழக்கு விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞர் ஒருவர் ‘டி-சர்ட்’ அணிந்தவாறு கட்டிலில் சாய்ந்து படுத்து கொண்டு வாதாடினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நீதிபதி எஸ்.ரவீந்திர பட், “நாம் இப்போது மிகவும் கடுமையான காலகட்டத்தை கடந்து வருகிறோம். இந்தநிலையில் காணொலி அமர்வுகள் தவிர்க்க முடியாத அம்சமாகி உள்ளது. இந்த நிலையில் இந்த அமர்வுகளில் ஆஜராகும்போது குறைந்தபட்ச கோர்ட்டு நடவடிக்கைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்” என்று கடும்கண்டனம் தெரிவித்தார்.

உடனே வக்கீல் மன்னிப்பு கோரியதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தொடர்ந்து காணொலி அமர்வில் ஆஜராகும் வக்கீல்கள் அனைவரும் திரையில் சரியான முறையில் உடை, பின்னணியுடன் ஆஜராக வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.


Share this News: