பானஜி (21 ஜன 2022): கோவா பாஜக முன்னாள் முதல்வர் மனோகர் பரிக்கரின் மகன் உத்பல் பரிக்கர் பாஜகவிலிருந்து விலகியுள்ளார்.
மூன்று முறை கோவா முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர் மனோகர் பரிக்கர். இவரின் மகன் மகன் உத்பல் பரிக்கர். இவர் அடுத்த மாதம் நடைபெற உள்ள கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது தந்தையின் தொகுதியான பானஜியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார்.
ஆனால் பாஜக அவருக்கு சீட் தர மறுத்துவிட்டது. இதனால் ஆத்திரமுற்ற உத்பல் பரிக்கர் பாஜகவிலிருந்து விலகியுள்ளார்.
அதே வேளை வரும் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாகவும் தனது அரசியல் எதிர்காலத்தை கோவா மக்கள் தீர்மானிக்கட்டும் என்றும் உத்பல் பரிக்கர் தெரிவித்துள்ளார்.
மனோகர் பரிக்கர் 2019 இல் இறக்கும் வரை 25 ஆண்டுகளாக அவர் வசம் இருந்த தொகுதி பானஜி. ஆனால், அங்கு அவரது எதிரியான அடானாசியோ மான்செராட்டுக்கு பாஜக டிக்கெட் கொடுத்தது.
கடந்த தேர்தலின் போதும், இம்முறையும் கட்சியை நம்பவைக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன், அதற்கு கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல, பானஜியின் சாமானியர்களின் ஆதரவும் உள்ளது” என்று உத்பால் பரிக்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எனினும் உத்பலுக்கு வேறு தொகுதி தருவதாக கட்சி வாக்குறுதி அளித்தது. ஆனால் அவர் அதை நிராகரித்தார். இதற்கிடையே உத்பல் பரிக்கர் ஆம் ஆத்மியில் இணைவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.