பிரதமர் நிதி குறித்து பகீர் கிளப்பும் ப.சிதம்பரம்!

Share this News:

புதுடெல்லி (14 மே 2020): “PM-CARES, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதைப் பார்த்து எல்லோரும் செய்யும் தவறை செய்து விடாதீர்கள். இந்த தொகையானது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கையில் தரப்படாது. என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட PM-CARES நிதியிலிருந்து 1,000 கோடி ரூபாய், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படி ஒதுக்கப்பட்ட தொகையானது, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கைகளுக்கு சென்று சேராது என்று விமர்சித்துள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

“ரூ 20 லட்சம் கோடி என்று பிரம்மாண்டமான அறிவிப்பு. ஆனால் புலம் பெயர்ந்து நடந்தே வந்து வீடு திரும்பிய தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய் கூடத் தரமாட்டார்கள்.

மக்கள் தொகையில் கீழ்ப் பாதியில் இருக்கும் 13 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ 5,000 கொடுங்கள் என்று சொல்கிறோம். ஏழைக் குடும்பங்களுக்கு அரசு ஒரு ரூபாய் கூடத் தர மறுக்கிறது. இந்த நாட்டின் ஏழைகள் இருந்தால் என்ன, மடிந்தால் என்ன என்று நினைக்கும் அரசு நம்மை ஆள்கிறது,” என்று கறாரான விமர்சனத்தை முன் வைத்தார் சிதம்பரம்.

“அனைத்துத் தடைகளையும் தாண்டி தனது சொந்த ஊருக்கு ஒரு புலம் பெயர்ந்த தொழிலாளி சென்று சேர்ந்தார் என்று வைத்துக் கொள்வோம். கிராமத்தில் அவருக்கு எந்தப் பணியும் இல்லை. பணி இல்லை என்றால் அவருக்கு வருவாய் இல்லை. எப்படி அவர் வாழ்வார். குடும்பத்தை எப்படி வாழ வைப்பார்?” என்ற முக்கிய கேள்வியையும் எழுப்பியுள்ளார் சிதம்பரம்.


Share this News: