சீன படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை – பிரதமர் மோடி!

Share this News:

புதுடெல்லி (19 ஜூன் 2020): இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை, என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராணுவ நிலையை கைப்பற்றவும் இல்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சித்தவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டது என்று அனைத்துக் கட்சிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் இந்திய- சீன ராணுவம் இடையே நடந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சீன ராணுவ வீரர்கள் இரட்டிப்பாக 40 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்தது.

இந்த நிலையில் இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் ஊடுருவி விட்டதாக பரவி வந்தது. இதனையடுத்து இன்று பிரதமர் மோடி தலைமையில் காணொலிக் காட்சி மூலம் அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில் “இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை, இந்தியாவின் எந்தவொரு ராணுவ நிலையை கைப்பற்றவும் இல்லை. முன்னர் உண்மையில் கண்காணிக்கப்படாத பகுதிகளைக் கூட நமது ராணுவ வீரர்கள் இப்போது நன்கு பாதுகாத்து வருகின்றனர். இந்தியா அமைதியையும் நட்பையும் விரும்புகிறது, ஆனால் இறையாண்மையை நிலைநிறுத்துவதே முதன்மையானது. நாட்டின் ஒரு அங்குல நிலத்தின் மீது கூட யாரும் கண் வைக்க முடியாத வகையில் நமது பலம் உள்ளது. நாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை நமது ஆயுதப்படைகள் மேற்கொள்ளும்” என்றார்.


Share this News: