வேளாண் சட்டம் ரத்து – மோடியின் வாக்குறுதியை விவசாயிகள் நம்பத் தயாரில்லை – ராகுல் காந்தி!

Share this News:

புதுடெல்லி (21 நவ 2021): பிரதமரின் வார்த்தைகளை விவசாயிகள் நம்பத் தயாராக இல்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

விவசாய சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று ஐக்கிய கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) அறிவித்ததை அடுத்து ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடந்த கால அனுபவங்கள் விவசாயிகளை வேலைநிறுத்தத்தைத் தொடரத் தூண்டியுள்ளன. நரேந்திர மோடி முன்பு பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளார். மக்கள் இன்னும் அவரின் பொய்யான வாக்குறுதிகளில் சிக்குவதற்கு தயாராக இல்லை என்றும், “#Farmers Protest continues” என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தியும் ராகுல் ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக, இன்று நடைபெற்ற கூட்டத்தில் வேலை நிறுத்தத்தை தொடர கூட்டு கிசான் மோர்ச்சா முடிவு செய்தது. சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை வரவேற்று, விவசாயிகளின் இதர கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை வேலைநிறுத்தத்தைத் தொடர அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய மூன்று விவசாயச் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடர்பாக சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. மேலும், விவசாயிகள் முன்வைத்த வேறு சில பிரச்னைகளில் மத்திய அரசு சாதகமான முடிவை எடுக்க வேண்டும். என்பதும் விவசாயிகளின் கோரிக்கையாகும்.


Share this News:

Leave a Reply