தற்கொலைக்கு தூண்டியதாக அர்ணாப் கோஸ்வாமி மீது மீண்டும் சிஐடி விசாரணை!

Share this News:

மும்பை (27 மே 2020): பிரபல இன்டீரியிர் டிசைனர் தற்கொலை வழக்கு மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளது. அதன்படி ரிபப்ளிக் டிவி தலைமை செய்தியாளர் அர்ணாப் கோஸ்வாமி மீது விசாரணை நடத்த மகாராஷ்டிர உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை அலிபக் பகுதியை சேர்ந்தவர் அன்வாய் நாய்க். இன்டீரியிர் டிசைனர். இவர் கடந்த மே 2018 ல் அவரது பங்களாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய் குமுத்தின் உடல் இறந்த நிலையில் நாய்க் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. குமுத் எப்படி இறந்தார்? என்பது குறித்து அலிபக் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அன்வாய் நாய்க் தற்கொலைக்கான காரணம் குறித்து ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். இதை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி, ஐகாஸ்ட் எக்ஸ்/ஸ்கிமீடியாவை சேர்ந்த பெரோஸ் சாய்க், ஸ்மார்ட் ஒர்க்ஸ் நிதேஷ் சார்தா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அன்வாய் நாய்க்கிற்கு ரிபப்ளிக் டிவி வழங்க வேண்டிய தொகை வழங்காதது தான் தற்கொலைக்கு காரணம் என்று அவரது மனைவி தெரிவித்திருந்தார். ஆனால், இது தவறான குற்றச்சாட்டு என்று ரிபப்ளிக் டிவி விளக்கம் அளித்தது.

கான்கோர்ட் டிசைன் நிறுவனத்துடன் 2016ம் ஆண்டு ஏற்படுத்திய ஒப்பந்தத்தின்படி அனைத்து தொகையும் செலுத்தப்பட்டுவிட்டது. இதற்கான ஆவணங்கள் உள்ளது. இதை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைப்போம் என்று ரிபப்ளிக் டிவி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த வழக்கு அப்போது தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் அன்வாய் நாய்க்கின் மகள் மீண்டும் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனு அளித்தார். இதனை ஏற்று மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், சிஐடி விசாரணைக்கு மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.

வெறுப்பு பிரச்சாரங்கள் மூலமும் இந்துத்வா கொள்கையின் மூலமும் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வரும் அர்ணாப் கோஸ்வாமிக்கு இவ்வழக்கு மீண்டும் தூசு தட்டப்படுவது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


Share this News: