கொரோனா பாதிப்பால் மேலும் ஒரு எம்.எல்.ஏ மரணம்!

Share this News:

கொல்கத்தா (24 ஜூன் 2020): கொரோனா பாதிப்பால் மேற்கு வங்க எம்.எல்.ஏ தாமோனாஷ் கோஷ் உயிரிழந்தார்.

60 வயதான தாமோனாஷ் கோஷ் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவாக இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

ஏற்கனவே இந்த மாத தொடக்கத்தில் தமிழகத்தில் திமுகவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரான எம்எல்ஏ ஜெ.அன்பழகன் ஒரு வாரத்திற்கு மேலாக கொரோனா வைரஸூடன் போராடி சென்னையில் உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த இரண்டாவது எம்.எல்.ஏ தாமோனாஷ் கோஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

தாமோனாஷ் கோஷ் மரணம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, மிகுந்த வருத்தமாக இருக்கிறது. 3 முறை ஃபால்டா தொகுதி எம்எல்ஏவாகவும், கட்சி பொருளாளராகவும் இருந்த தாமோனாஷ் கோஷ், இன்று எங்களை விட்டு பிரிந்துவிட்டார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுடன் இருந்த அவர், மக்களுக்காகவும், கட்சிக்காவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளார். அவர் தனது சமூக பணி மூலம் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளார்.

தாமோனாஷ் நிரப்ப முடியாத ஒர் வெற்றிடத்தை விட்டுச்சென்றுள்ளார். அனைவரின் சார்பாக, அவரது மனைவி ஜார்னா, அவரது இரண்டு மகள்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மம்தா கூறியுள்ளார்.


Share this News: